உ.பி. குஷிநகர் திருமண விழாவில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்த பெண்கள்.. தண்ணீரில் மூழ்கி 13 பேர் பலி
திருமண விழா ஒன்றின் போது, கிணற்றின் மேல்தளம் உடைந்து விழுந்த விபத்தில் 13 பெண்கள் உள்ளே விழுந்து பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஷிநகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. விருந்தினர்களாக வந்த பெண்கள் சிலர், வீட்டிற்கு பின்னால் இருந்த கிணற்றின் மூடி மேல் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
கிணற்றின் மூடியானது இரும்பால் அமைக்கப்பட்டிருந்ததால், அது வலிமையாக இருப்பதாக நினைத்து 20க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், பாரம் தாங்காமல் கிணற்றின் இரும்பு மூடி திடீரென உடைந்து விழுந்தது. இதில், மூடி மீது நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வந்தனர். பின்னர்,கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள், சிறுமிகள் என 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்ததில் 13 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் 13 பெண்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications