உ.பி.யில் முஸ்லீம்களுக்கு பென்சனில் 25% ஒதுக்கீடு: அகிலேஷ் அரசு அறிவிப்பு
லக்னௌ: உத்தரபிரதேசமாநிலத்தில் ஆளும் அகிலேஷ் யாதவ் அரசு அங்கு வசிக்கும் முஸ்லீம்களுக்கு புதிய பென்சன் திட்டத்தில் 25 சதவிகிதம் ஒதுக்கீடு அளித்துள்ளது.
ஆளும் சமாஜ்வாதி கட்சி மக்களை கவரும் வகையில் புதிய பென்சன் திட்டத்தை அறிவித்துள்ளது. சமாஜ்வாதிகட்சி பென்சன் யோஜனா என்ற அந்த திட்டத்தில்தான் மாநிலத்தில் உள்ள முஸ்லீம் பெண்களுக்கு 25 சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் முதலாம் ஆண்டில் மாதம் ரூபாய் 500 வழங்கப்படும். அடுத்த ஆண்டு ரூ.750 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்கும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.2,400 கோடி ரூபாய் புதியதாக செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு 30 சதவிகிதமும், முஸ்லீம்களுக்கு 25 சதவிகிதமும், ஒ.பி.சி மற்றும் பொதுப்பிரிவினருக்கு 45 சதவிதமும் கூடிய புதிய பென்சன் திட்டம அறிமுகப்படுத்தப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்தார். அதேபோல முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பில் 18 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
முஸ்லீம்பெண்களின் திருமணத்திற்காக ரூ.20000 நிதி உதவி, மாணவர்களுக்கு லேப்டாப், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது அகிலேஷ்யாதவ் அரசு.