ரூபாய் நோட்டு.. உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு காத்திருக்கு ஆப்பு
லக்னோ: டெல்லியை விட 20 மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் அங்கிருக்கும் ஏடிஎம்களைவிட 2 மடங்கு ஏடிஎம்கள் மட்டுமே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மக்கள் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் 2017-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பு பெறும் சவாலாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது உத்தரப் பிரதேச மாநிலத்தில் 19 ஆயிரத்து 143 ஏடிஎம் சென்டர்கள் மட்டுமே உள்ளதால் ரூபாய் நோட்டுகள் அறிவிக்கப்பட்ட விவகாரத்தினால் அந்த மாநில மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த சூழல் வருகிற 2017-ம் புத்தாண்டு வரையில் நீடிக்கும்னால் அங்கு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பு என்பது கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு:
வருகிற 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் அதிக மதிப்புள்ள 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதனால் ஏழை-எளிய மக்கள் அன்றாடம் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வேலைக்கு செல்லாமல் வங்கிகளிலும், ஏடிஎம், அஞ்சல் அலுவலகம் என அறிவிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் வாசலில் காத்துக் கிடக்கும் அவலம் எழுந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் திரிணமூல் காங்கிரஸ் இடதுசாரிகள், திமுக அதிமுக என அனைத்துக் கட்சிகளும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த அறிவிப்பினால் பெரும் இன்னல்களை சந்தித்த 85-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
25 ஆயிரம் ஏடிஎம்கள்:
இந்த மாநிலத்தில் வங்கி செயல்பாடுகள் மிகவும் மோசம் என்று கூறிய அவர், 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட டெல்லியில் 9 ஆயிரத்து 70 ஏடிஎம் மையங்களும், 11 கோடி மக்கள் தொகை உடைய மகராஷ்ட்ராவில் 25 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து, உத்தரப் பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு போலீஸ் கூடுதல் தலைவரும்ரூபாய் நோட்டு விவகார கண்காணிப்பு சிறப்பு அதிகாரியுமான தல்சித்சிங் சவுத்ரி கூறியதாவது:
காவலர்களில் 25 சதவீதம்:
வங்கிகளில் பணம் இல்லை என்பதே உண்மையான நிலவரம். கிராமங்கள் நகரங்கள் என வரிசைக்கு வரிசை 400-க்கும் அதிகமான மக்கள் காத்துக்கிடக்கும் நிலையில் திடீரென பணம் இல்லை என்று அறிவிப்பதால் மக்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இறங்கி விடுகின்றனர். மாநிலத்தில் உள்ள மொத்த காவலர்களில் 25 சதவீதம் இந்த பாதுகாப்பு பணிக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் எனக்கு 2-3 வங்கிகளில் இருந்தாவது இப்பிரச்னை குறித்து தகவல் வருகிறது என்றார். பாஜகவுக்கு எதிரான மன நிலையை மக்களிடத்தில் விதிக்கும் நடவடிக்கையில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஈடுபட்டுள்ளன. அதன்படி அந்த மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மிகப் பெரிய பேரணி நடத்திய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மக்களை வரிசையில் நிற்க வைத்த பாஜகவுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஏற்கனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து இருப்பதுடன் மக்கள் செய்யாத தவறுக்காக கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரூ.2 லட்சம் இழப்பீடு :
பணம் எடுப்பதற்காக வங்கியில் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்த மாநில முதலமைச்சரான அகிலேஷ்யாதவ் ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்னையால் பலியானவர்களில் 30 பேர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதில் 3 வழக்குகள இந்த விவகாரம் சம்பந்தப்பட்டதுதான என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்கப்பட்டதை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. ஆனால் பாஜக அந்த நடவடிக்கையை குற்றம் சுமத்தி இருப்பதுடன் போதிய வங்கிகளை நிர்வகிக்காமல் மக்களை சாந்தப்படுத்தும் நடவடிக்கையில் அகிலேஷ் அரசு ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி விமர்சித்துள்ளது.
கதிகலங்கி இருப்பதால்:
பகுஜசன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதில் கதிகலங்கி இருப்பதால் பிரதமர் மோடியை விமர்சித்து வருவதாக பாஜக உத்தரப் பிரதேச மாநில தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா குற்றம் சுமத்தியுள்ளார். இந்த ரூபாய் நோட்டு பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவலர் ஒருவர், இந்த விவகாரத்தினால் பிரச்னை இருக்கிறதுதான் என்றார். பாஜகவுக்கு தேசிய அளவில் நகரங்களைவிட கிராமங்களில் அதிக அரசியல் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது:
கிராம மக்கள் வங்கி அட்டைகளை பயன்படுத்த தெரியாமல் இருப்பதால் அவர்களுக்கு வழிகாட்டும் நடவடிக்கைகளை தொடங்க இருப்பதாக சமாஜ்வாதி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அந்த அட்டைகளை பயன்படுத்தும் போது கிராம மக்கள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரூபாய் நோட்டு விவகாரத்தினால் விவசாய நாற்று விதைப்பு கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் திருமணத்துக்கு ரூ.2.50 லட்சம் என்ற கட்டுப்பாடு மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ரூபாய் நோட்டு விவகாரத்தினால் உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பரிவர்தன் யாத்திரையில் கூட்டம் கூடுவதில்லை
பாஜகவினரின் பரிவர்தன் யாத்திரையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடுவதில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பாக பகுஜன் சமாஜ் நடத்திய பேரணியில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஆனால் பாஜகவினர் நடத்தும் பர்வர்தன் யாத்திராவில் மக்கள் அதிகம் கூடுவதில்லை. எனவே, வருகிற 24-ம் தேதி நடைபெற இருந்த 4 பர்வர்தன் யாத்திரைகளை பிரதமர் மோடி அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற மில்லியன் டாலர் கேள்விகள் எழுந்துள்ளன. வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டுகள் வருகிற 30 -ம் தேதி வரை டெப்பாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக இந்த விவகாரத்தில் மோடி உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற பேச்சுகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உலா வருகிறது.
நற்பெயருக்கு களங்கம்:
இதனிடையே ஐரோப்பிய 10 பேர் அடங்கிய குழு ஒன்றும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பாஜக அலுவலகம் சென்று நிலவரம் அறிந்துள்ளது. அவர்களிடம் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் மக்களுக்கு பிரச்னை இருப்பது உண்மைதான் என்றும், ஆனாலும் வணிகர்கள் விவசாயிகள் என மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். உண்மையான தேச பற்றாளர்கள் எங்களுடன் இருப்பதாகவும் மாநில பாஜகவின் துணைத்தலைவர் ஆர்என்ராவத் கூறியிருக்கிறார்.