உ.பி.யில் லோக்சபா இடைத் தேர்தல்: சமாஜ்வாடிக்கு பகுஜன் சமாஜ் அதிரடி ஆதரவு!
உத்தரப்பிரதேசத்தில் வரும் 11-ந் தேதி நடைபெற உள்ள லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் சமாஜ்வாடிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு தர உள்ளது,
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வரும் 11-ந் தேதி நடைபெற உள்ள 2 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிப்பதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் விஸ்வரூபமெடுத்து வரும் பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் கைகோர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளன. மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல் முடிவுகளும் இதைத்தான் வெளிப்படுத்துகின்றன.
உபி இடைத் தேர்தல்
வரும் 11-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் புல்புர் லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் யோகி, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா ஆகியோர் தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்ததால் இத்தேர்தல் நடைபெறுகிறது.
மாயாவதி ஆதரவு
உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து வெற்றியை பெற்று வரும் பாஜகவுக்கு இது அக்னி பரீட்சை. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி செய்தித் தொடர்பாளர் பன்குரி பதக் தமது ட்விட்டர் பக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இடைத் தேர்தலில் ஆதரவு தர வாய்ப்புள்ளதாக பதிவிட்டுள்ளார்.
சமாஜ்வாடியின் எதிர்பார்ப்பு
மேலும் மாயாவதியின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் போட்டியிடாது என்பது தெரியும். ஆகையால் அக்கட்சியின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சமாஜ்வாடிக்கு பகுஜன் ஆதரவு
இந்நிலையில் கோரக்பூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர் சந்திரகர்வார், சமாஜ்வாடி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத்தை ஆதரிப்போம் என அறிவித்துள்ளார். இதே கூட்டணி லோக்சபா தேர்தலில் நீடிக்குமா என்பது தெரிவிக்கப்படவில்லை.