டெல்லியை நோக்கி படையெடுத்த ராணுவத்தினர்.. நடுங்கிப் போன மத்திய அரசு!
டெல்லி: கடந்த 2012ம் ஆண்டு டெல்லியை நோக்கி திடீரென ராணுவத்தினர் கிளம்பி வந்த சம்பவம் அப்போது மத்திய அரசை பெரும் பதட்டத்திற்குள்ளாக்கியதாக ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏகே.செளத்ரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம், படையினரை உடனடியாக திரும்புமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து ராணுவத்தினர் மீண்டும் பாசறைக்குத் திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் மத்திய அரசை பயமுறுத்தியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது அதை ஆம் என்று கூறியுள்ளார் செளத்ரி.
2012ம் ஆண்டு ஜனவரி மாதம்
2012ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெல்லியை நோக்கி திடீரென ராணுவ வீரர்கள் படை கிளம்பி வந்தது. இது அரசின் கவனத்திற்கு உடனடியாக சென்றது. அதுகுறித்து அப்போது பரபரப்பும் ஏற்பட்டது.
பயந்து போன அரசு
இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற ராணுவ தளபதியான செளத்ரி கூறுகையில், இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அரசின் உயர்மட்டம் பெரும் பதட்டமடைந்து விட்டது.
அவசர உத்தரவு
உடனடியாக பாதுகாப்புத்துறை செயலாளர் ராணுவத் தலைமையைத் தொடர்பு கொண்டு படையினரைத் திரும்பச் சொன்னார். அதன் பின்னர் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பயப்படத் தேவையில்லை
இந்த விஷயத்திற்காக அரசு அவ்வளவு தூரம் பயந்திருக்கத் தேவையில்லை என்று நான் பாதுகாப்புத்துறை செயலாளரிடம் தெரிவித்தேன் என்றார் செளத்ரி.
ஏன் இந்த படை நடமாட்டம்
அந்த சமயத்தில் அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் வயது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்தது. மேலும் அரசுக்கும், சிங்குக்கும் இடையே கடும் மோதலும் மூண்டிருந்தது. இந்த பின்னணியில்தான் படை வீரர்கள் நடமாட்டம் அரசுக்குப் பல சந்தேகங்களை ஏற்படுத்தி விட்டது.
புரட்சிக்குத் திட்டமா
ராணுவப் புரட்சி வெடிக்கலாமோ என்ற சந்தேகங்கள் கூட கிளப்பப்பட்டன. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியும் அதை மறுத்து விட்டனர்.
ஹிஸ்ஸார், ஆக்ராவிலிருந்து
ஜனவரி 16ம் தேதி இரவு ஹிஸ்ஸார் மற்றும் ஆக்ராவிலிருந்து வழக்கத்திற்கு விரோதமான வகையில் ராணுவத்தினர் கிளம்பி டெல்லியை நோக்கி வந்தனர். இதுவே அப்போது ஏற்பட்ட பதட்டத்திற்குக் காரணம்.