59 பேர் உயிரிழந்த டெல்லி தியேட்டர் தீ விபத்து விசாரணை கடந்து வந்த பாதை!
டெல்லி: 59 பேரை பலி கொண்ட தியேட்டர் தீ விபத்து சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 2 ரியல் எஸ்டேட் அதிபர்களும் சிறை தண்டனையில் இருந்து தப்பித்துள்ளனர். இருப்பினும், தலா ரூ.30 கோடி ரூபாயை டெல்லி அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சுப்ரீம்கோர்ட்.
1997ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி தெற்கு டெல்லியில் பார்டர் என்ற பாலிவுட் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த 'உப்கார்' சினிமா தியேட்டரில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு மூச்சு திணறல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் தியேட்டர் அதிபரும் ரியல் எஸ்டேட் அதிபருமான சுஷில் மற்றும் கோபால் அன்சல் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்தது சிபிஐ.
76 வயதான சுஷில் 5 மாதங்களும், 67 வயதான கோபால் 4 மாதங்களும் சிறை வாசம் அனுபவித்த நிலையில், 18 வருடம் பழமையான இவ்வழக்கில், சுப்ரீம்கோர்ட்டின் ஏ.ஆர்.தாவே, குரியன் ஜோசப் மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது.
சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்டோர் நல சங்கம் ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சால்வே மற்றும் துல்சி ஆகியோரின் வேண்டுகோளான, சிறை தண்டனையை விதிக்க மறுத்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலா ரூ.30 கோடியை டெல்லி அரசிடம் அளிக்க வேண்டும். அப்படி செலுத்தினால் சிறை தண்டனை கிடையாது என தீர்ப்பளித்தனர். இந்த நிதியை டெல்லி அரசு மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
இந்த வழக்கு கடந்த பாதை:
1997 ஜூன் 13- உப்கார் தியேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1997 ஜூலை 22- உப்கார் தியேட்டர் உரிமையாளர் சுஷில் அன்சால் மற்றும் அவரது மகன் பிரானவ் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 24- டெல்லி காவல்துறையிடமிருந்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் மாற்றப்பட்டது.
நவம்பர் 15- சுஷில் மற்றும் கோபால் அன்சால் உட்பட 16 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
1999 மார்ச் 10- செஷன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எல்.டி.மாலிக் முன்னிலையில் விசாரணை தொடங்கியது.
2002 ஏப்ரல் 4- டிசம்பர் 15ம் தேதிக்குள் வழக்கை முடிக்குமாறு டெல்லி ஹைகோர்ட், விசாரணை நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.
2003 ஜனவரி ஏப்ரல் 24- பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ரூ.18 கோடியை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டது.
2007 நவம்பர் 20- கோர்ட் 12 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. சுஷில் மற்றும் கோபால் அன்சாலும் அதில் அடக்கம். அனைவருக்கும் 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
டிசம்பர் 19- 12 பேரில் 6 குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்த டெல்லி ஹைகோர்ட், 2 வருடங்களுக்கு பதிலாக ஓராண்டு சிறை தண்டனையாக குறைத்தது.
2009- தண்டனையை உறுதி செய்ய சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
2014 மார்ச் 5- சுப்ரீம்கோர்ட்டின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
2015 ஏப்ரல் 21- மூன்று நீதிபதிகள் பெஞ்ச், வழக்கை விசாரிக்க தொடங்கியது.