தண்ணீர் வாளியை தட்டிவிட்டதால் கர்ப்பிணிப்பெண் அடித்துக் கொலை.. உ.பி.யில் பயங்கரம்
உத்திரபிரதேசத்தில் தண்ணீர் வாளியைத் தட்டிவிட்டதற்காகத் தாக்கப்பட்ட தலித் பெண் உயிரிழந்தார்
லக்னோ: தண்ணீர் வாளியைத் தெரியாமல் தட்டிவிட்டதற்காக கர்ப்பிணிப்பெண் பயங்கரமாகத் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புலன்ந்த்சாகரின் கெட்லாபூர் பான்சோலி என்கிற கிராமத்தில் வசித்து வருபவர் சாவித்ரி தேவி. இவர் எட்டு மாத கர்ப்பிணி. தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
அதே பகுதியில் இருக்கும் உயர்சாதியினர் வீட்டில் பாத்திரங்கள் துலக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் வழக்கம் போல தனது வேலையில் ஈடுபட்டிருந்த போது, களைப்படந்த சாவித்ரி நடக்கமுடியாமல் எதிர்வீட்டு சுவரைப் பிடித்து நின்றிருக்கிறார்.
அப்போது அவரை அறியாமல் அந்த வீட்டுத் திண்ணையில் வைக்கப்பட்டிருந்த வாளியை கைபட்டு கீழே விழுந்துவிட்டது. இதைப் பார்த்துவிட்ட அந்த வீட்டுப் பெண்மணி, ' நீ எப்படி என் வீட்டு வாளியில் கைவைக்கலாம்' என்று சொல்லியபடியே சாவித்ரி தேவியின் வயிற்றில் எட்டி உதைத்தார்.
மேலும், அவரது தலையிலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸில் புகார் அளிக்கச் சென்ற சாவித்ரியின் கணவரை, வெளிக்காயம் எதுவும் இல்லாததால் புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட சாவித்ரி, கடந்த புதன்கிழமை வலியால் அலறித்துடித்து இருக்கிறார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. எட்டு மாத கர்ப்பத்தில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.