இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் ‘திடீர்’ ராஜினாமா
டெல்லி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர் 67 வயது நான்சி பவல். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நெருக்கமானவராக நான்சி பவல் கருதப்படுகிறார். ஆனால், வரும் லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
இதனால், மோடியுடனும், பாஜகவுடனும் நேசக்கரம் நீட்ட அமெரிக்கா தயாராகிவிட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி 13-ந்தேதி, நரேந்திர மோடியை நான்சி பவல் சந்தித்தார். இதற்கிடையே நான்சி பவல் நீக்கப் பட்டு இந்தியாவுக்கான புதிய தூதர் நியமிக்கப்படலாம் என கடந்த ஒரு வாரமாக யூகங்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் நான்சி பவல். இத்தகவலை டெல்லி அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான கடிதத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் சமர்ப்பித்து விட்டதாகவும், மே மாத இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்தகவல், அமெரிக்க தூதரக இணையதளத்தில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நான்சி பவலின் திடீர் ராஜினாமா பரபரப்பைக் கிளப்பியுள்ளது.