சானிட்டரி நாப்கின் பிரச்சினை... 40 மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்த ஹாஸ்டல் வார்டன்!
மத்தியப்பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவிகள் 40 பேர் நிர்வாணப்படுத்தி சோதனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தில் சானிட்டரி நாப்கின் பிரச்சினை தொடர்பாக சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்திய ஹாஸ்டல் வார்டனுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
மத்தியப்பிரதேசம் சாகர் நகரில் உள்ளது டாக்டர் ஹரி சிங் கோர் பல்கலைக்கழகம். இங்குள்ள மாணவியர் விடுதி வளாகத்தில் கடந்த ஞாயிறன்று பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின் ஒன்று கிடந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பயன்படுத்திய சானிட்டரி நாப்கினை குப்பைத் தொட்டியில் போடாமல் வளாகத்தில் போட்டது யார் என தெரிந்து கொள்ள, அங்கிருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவியரை ஒருவர் பின் ஒருவராக தனித்தனியாக நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தியுள்ளார் ஹாஸ்டல் வார்டன்.
இதனால் கோபமடைந்த மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு சம்பந்தப்பட்ட ஹாஸ்டல் வார்டனுக்கு எதிராக அவர்கள் புகாரும் அளித்தனர்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அப்பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.பி.திவாரி, "இது துரதிர்ஷ்டமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. நான் அவர்கள் எல்லோரையும் என் மகள்களைப் போலவே இருப்பதாக மாணவர்களிடம் சொன்னேன், அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நான் உறுதியளித்தேன். வார்டன் தவறு என்று கண்டறியப்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் " எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட விசாரணை கமிட்டிக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சானிட்டரி நாப்கின் மற்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை குறித்து பேசிய, 'பேட் மேன்' பட வெற்றியைத் தொடர்ந்து, நாடெங்கும் இது தொடர்பாக புதிய வரவேற்கத்தக்க விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது. இது சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படையாகத் தெரிந்தது.
இந்நிலையில், சானிட்டரி நாப்கின் பிரச்சினைக்காக நாற்பது மாணவிகள் நிர்வாணப்படுத்தப் பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.