நிலத்தை தர மறுத்த பெண்... நிர்வாணமாக்கி தலைகீழாகத் தொங்க விடப்பட்ட கொடூரம்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் நிலத்தை எழுதித் தர மறுத்த பெண்ணை நிர்வாணமாக்கி, மரத்தில் தலைகீழாகத் தொங்க விட்ட கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள குத்தார-ஜட்டபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்த நிலத்தை அபகரிக்க அதே ஊரைச் சேர்ந்த சில பணக்காரர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், நிலத்தை தர அப்பெண் சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பணக்காரர்கள் கூட்டம், அப்பெண்ணை அடித்து உதைத்து துன்புறுத்தி, நிர்வாணமாக்கி, ஒரு மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
தனக்கு நேர்ந்த இந்த கொடுமை தொடர்பாக லோக்கல் போலீசில் புகார் அளிக்கச் சென்றுள்ளார் அப்பெண். ஆனால் புகாரை வாங்க மறுத்த போலீசார் அவரை அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அந்த பெண், இறுதியாக பல்ராம்பூர் மாவட்ட நீதிபதியிடம் சென்று முறையிட்டார்.
உடனடியாக இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்து துளசிபூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. புகாரை வாங்க மறுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கே ராய் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் அலோக் குமார் சிங் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி வி.டி சுக்லா கூறுகையில், "புகார் கொடுக்க செல்லும்போது அந்த பெண்ணை தள்ளிவிடவில்லை. நாங்கள் வாஜித் அலி , சாஜித் அலி, மொகமத் முத்வில், மொகமத் முத்லப், ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளோம். மேலும் கூடுதல் போலீஸ் அதிகாரி எல்.பி. யாதவ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி உள்ளார். அதில், அப்பெண் கூறிய குற்றசாட்டுகள் உண்மை என தெரிய வந்து உள்ளது. மண்டல அதிகாரி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்" என்றார்.
இந்த பெண் மீது தாக்குதல் நடப்பது இது முதல் முறையல்ல. 2 மாதத்திற்கு முன் இந்த பெண்ணை அடித்து உதைத்து உள்ளனர். அவரது மகனையும் ஊரை விட்டு ஓடி விடுமாறு மிரட்டியுள்ளனர். இதனால், தற்போது அவரின் மகன் அவருடன் இல்லை.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், " இது என்னுடைய நிலம் அதை என்னிடம் இருந்து பறிக்க முடியாது நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். தற்போது எனது நிலத்தை அபகரிக்க நீதிமன்றம் தடை விதித்து உள்ளது" என்கிறார்.