உத்தரகாண்ட் வெள்ளம்: 10 பேர் உடல்கள் மீட்பு... மற்றவர்கள் கதி என்ன ?
டேராடூன்: உத்தரகண்ட்டில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் 150-க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக அஞ்சப்படும் நிலையில் சம்தோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் சமோலி மாவட்டத்தில் பனிச்சரிவால் தெளளிகங்கா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு#Flood #Uttrakhand pic.twitter.com/raV4efVWEw
— Oneindia Tamil (@thatsTamil) February 7, 2021
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று திடீரென்று சரிந்து விழுந்ததது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக ரைனி கிராமத்தில் தவுளிகங்கா நதிக்கரையில் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு.. உ.பி.யில் கங்கை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மீட்பு குழு
மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் உத்தரகண்ட் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். அதேபோல மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையின் இரண்டு பிரிவுகளும் உத்தரகண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநில பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 200 பேரும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
150 பேர் காணவில்லை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரிஷிகங்கா மின் திட்டத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காணவில்லை என்றும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மாநில பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சமோலி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை
வெள்ளப் பெருக்கு காரணமாகச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும், விஷ்ணுபிரயாக், ஜோஷிமத், கர்ன்பிரயாக், போன்ற பகுதிகளில் மக்கள் ஆற்றின் அருகே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிசிகேஷ் பகுதியில் படகு போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ட்வீட்
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அசாமில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்வதாகவும், முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் இது குறித்துப் பேசியதாகவும் ட்வீட் செய்துள்ளார். மேலும், மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல உள் துறை அமைச்சர் அமித் ஷா , பேரிடர் குறித்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
16 பேர் மீட்பு
மாயமானவர்களில் 16 தொழிலாளர்கள் சுரங்கம் ஒன்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மற்ற சுரங்களில் யாராவது சிக்கி உள்ளார்களா என தேடி வருவதாகவும், சுரங்கங்களை உடைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.