காதலர் தினத்தில் ஹோட்டலுக்குப் போன ஜோடிகள்... அடித்து நொறுக்கிய கும்பல் - 17 பேர் கைது
காதலர் தினத்தன்று போபலில் உள்ள உணவு விடுதியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது சிலர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். உணவு விடுதி உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் 17 கைது செய்யப்பட்டுள்ளனர்.
போபால்: காதலர் தினம் கொண்டாடியதாக கூறி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உணவு விடுதியை 17 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. உணவு விடுதி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏவும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல சந்தோஷ சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் காதலர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றன. காதல் எதிர்ப்பாளர்கள் சில ஊர்களில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். சிலரோ கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு கும்பம் உணவு விடுதியையும், ஹுக்கா பார் ஒன்றையும் அடுத்தி நொறுக்கியுள்ளது.
போபாலில் உள்ள சியாமளா ஹில்ஸ் பகுதிகளில் உள்ள ஹுக்கா பார், உணவு விடுதிக்கு வந்த அந்த நபர்கள் கைகளில் காவிக்கொடிகளை கைகளில் ஏந்தி வந்தனர். ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கதுடன் உணவு விடுதியை அடித்து நொறுக்கினர். தாக்குதல் நடத்தியவர்கள் பாரதிய யுவ மோர்ச்சா, சிவ சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
கைகளில் ஹாக்கி மட்டைகளை வைத்திருந்த அந்த நபர்கள் கஃபேக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கு காபி குடித்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து நீங்கள் லவ் ஜிகாத்தை ஆதரிக்கிறீர்கள். இது ட்ரைலர்தான். அடுத்த முறை பார்த்தால் உங்களைக் கொண்டு விடுவோம் என்று மிரட்டியதாக ஹோட்டல் விடுதி மேனேஜர் நரேந்திர குமார் காவல்துறையினரிடம் தெரிவித்தார். ஹோட்டல் மேனேஜர் அளித்த புகாரின் பேரில் 17 பேர் கைது செய்ப்பட்டுள்ளனர்.