‘ரிஷப’ ராசி இல்லை போல! மீண்டும் மோதிய மாடு.. டேமேஜான வந்தே பாரத் ரயில்! இதுக்கு எண்டே இல்லையா?
காந்திநகர் : குஜராத் மாநிலத்தில் அதுல் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயிலின் மீது மீண்டும் மாடு ஒன்று மோதியதில் அந்த ரயிலின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது. அடுத்தடுத்து ரயில் மீது மாடுகள் மோதி வரும் நிலையில் தற்போது இந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது.
ஜப்பான் நாட்டில் இயக்கப்படும் புல்லட் ரயில் போல இந்தியாவிலும் ரயில்கள் இயக்கப்படுமா என்பது பல ஆண்டு கேள்வியாக இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் இயக்கப்பட்டவை தான் வந்தே பாரத் ரயில்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத் ரயில்
பார்ப்பதற்கு அச்சு அசலாக ஜப்பானின் புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் என்பதும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் இந்த ரயில்கள் மும்பையையும் காந்தி நகரையும் 7 மணி நேரத்திற்குள் இணைக்கும் வல்லமை பெற்றவை. அதுமட்டுமல்லாது முழுக்க முழுக்க ஏசி வைபை எல் இ டி டிவி போன்ற வசதிகளுடன் இருக்கும் இந்த ரயில்கள் கலந்த சில நாட்களாகவே சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது.

அடுத்தடுத்து விபத்து
இயக்கப்பட்ட முதல் நாளே ரயில் மீது எருமை மாடு மோதியது. அதற்கடுத்த இரண்டாவது நாள் பசு மாடு மோதியது. இதில் வந்தே பாரத் ரயிலின் முன் பகுதி சேதமான நிலையில் இணையதளங்களில் கடும் கிண்டல் கேலிக்கு உள்ளானது எருமை மாடு மோதுவதை கூட இந்த ரயிலால் தாங்க முடியாதா என பலரும் விமர்சித்த நிலையில் ரயிலின் முன்பாகம் சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.

3வது விபத்து
இந்த நிலையில் தற்போது மீண்டும் வந்தே பாரத் ரயில் சேதம் அடைந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் அதுல் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயிலின் மீது மீண்டும் மாடு ஒன்று மோதியதில் அந்த ரயிலின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது. காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது காலை சுமார் எட்டு மணி அளவில் இந்த ரயில் மாடுகள் மீது மோதியுள்ளது. இதில் ரயிலின் முன் பகுதி சேதம் அடைந்ததால் சுமார் 15 நிமிடம் பயணம் தடைப்பட்டது.

சோதனை மேல் சோதனை
இதனால் பயணிகள் கடும் அவதியடைந்த நிலையில், தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே துறையினர் ரயிலின் சேதமடைந்த பகுதியை சரி செய்தனர். இதனையடுத்து மீண்டும் ரயில் புறப்பட்டது. இந்த விபத்தில் மாடு ஒன்று காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் மாட்டின் உரிமையாளர் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை வந்தே பாரத் ரயில் மீது மாடுகள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் தற்போது மூன்றாவது முறையாக மாடுகள் மோதி ரயிலின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications