சசிகலாவை சந்தித்த கர்நாடக காங். தலைவர் பரமேஸ்வரின் பி.ஏ... டிஐஜி ரூபா பரபரப்பு
இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் விசாரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பிரகாஷ் ஏற்கனவே சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக கர்நாடகா முன்னாள் அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியது அம்பலமாகியுள்ளது. இதனை சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சகல வசதிகளுடன் ராஜபோக வாழ்க்கை வாழ்கிறார் என்று அறிக்கை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் டிஐஜி ரூபா. சிறையில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்கான பரிசாக அவருக்கு பணி இடமாற்றம் அளிக்கப்பட்டது.
இடமாற்றம் செய்யப்பட்டாலும் அதற்காக ரூபா கலங்கவில்லை. தினசரியும் பரபரப்பாக பல தகவல்களை வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மாத்திரைகள்
சசிகலாவுக்கு தேவையான மருத்து, மாத்திரைகள் அனைத்தும் வெளியில் இருந்துதான் வந்தன. ஆனால் கைதிகளுக்கு தேவையான மருந்துகளை சிறைக்குள்ளேயே வாங்க முடியும். தேவைப்பட்டால் மருத்துவர்கள் உதவியுடன் வெளியில் இருந்து சிறைத்துறையே வாங்கித் தரும். ஆனால் அவருக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் வெளியில் இருந்து வந்தன.
கைதி உடையை பயன்படுத்தாத சசிகலா
சிறையில் கைதிகளுக்கு கொடுக்கும் உடையை அவர் ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை. நாங்கள் கொடுத்தபோது எப்படி மடித்து இருந்ததோ, அது அப்படியே இருந்தது. அவர் தனியாக வாங்கிக் கொண்டு வந்த சுடிதார், புடவைகள், நைட்டிகளையே பயன்படுத்தி வந்தார்.
பிரியாணி சாப்பிட்ட சசிகலா
குக்குர், காபி மேக்கர், சூப் செய்ய தேவையான பொருட்கள் உட்பட வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன. பிரியாணி செய்வதற்கான பொருட்கள் இருந்தன.
சிக்காத சசிகலா
சசிகலா சிறை அறையில் தங்காமல் வெளியே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதை நேரடியாக கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். ஆனால் என் கண்ணில் அவர் சிக்கவில்லை, அதை நான் கண்டுபிடித்திருந்தால் கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன்
ஐபோன், சிம்கார்டு
சசிகலா சிறைக்குள் ஆப்பிள் ஐபோன் மற்றும் 2 சிம்கார்டு வைத்திருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவரிடம் சோதனை நடத்தி என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த பணிகள் நிற்கவில்லை. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
செயல்படாத ஜாமர் கருவி
சிறையில் செல்போனை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை பயன்படவில்லை. நான் கேட்டபோது எல்லாம் பழுதடைந்திருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
சிறையில் தண்டனை குற்றவாளிகள் வேலை செய்ய வேண்டும். ஆனால் சசிகலா எந்த வேலையும் பார்க்காமல் உள்ளார்.
சந்தித்த பிரகாஷ்
ஊடகங்களுக்கு ரூபா அளித்துள்ள பேட்டியில், தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுத்ததாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா சசிகலாவை சந்தித்தாரா என்பது தெரியாது. ஆனால் பெங்களூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். பல விஐபிக்கள் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்.
முன்னாள் அமைச்சரின் உதவியாளர்
கர்நாடக மாநில முன்னாள் உள்துறைஅமைச்சர் பரமேஸ்வரின் உதவியாளர்தான் பிரகாஷ். தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் விசாரிக்கப்பட்டவர்தான் இந்த பிரகாஷ். தினகரனை தெரியும் என்று கூறி அனைத்தையும் உளறிக்கொட்டியவர் இவர்.
ரூ. 2 கோடி கொடுத்த தினகரன்
தினகரன் மூலம் பெங்களூர் சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக கூறியதோடு சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்கு ரூ.2 கோடி தினகரன் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாக கூறியதை அடுத்தே இந்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அதிகாரிகள் கண்காணிப்பு
பெங்களூர் சிறையில் விதிகளை மீறி சலுகைகளை பெற ரூ.2 கோடி கைமாறியது பற்றி டெல்லி போலீசார் மத்திய உள்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்தே சசிகலா தரப்பினரை பொறி வைத்து பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதமாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிக்கப்பட்டு வந்தது.
பொறியில் சிக்கிய சசிகலா
அப்போது சசிகலா தனக்கு தேவையான எல்லா வசதிகளையும் சிறைக்குள் செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் ஒவ்வொரு சலுகையும் பெற ஒவ்வொரு தடவையும் பணம் கொடுக்கப்படுவதும் தெரிய வந்தது. சிறை துறையில் பல்வேறு உயர் அதிகாரிகள் சசிகலா தரப்பிடம் இருந்து பணம் பெறுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே அதிரடி நடவடிக்கைகள் மூலம் சசிகலா பெற்று வரும் சலுகைகள் அம்பலப்படுத்தப்பட்டது.
தண்டனை அதிகமாகும்
சசிகலாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு எந்த வசதியும் சிறையில் செய்யவில்லை என்று கூறியிருந்தார் டிடிவி தினகரன். பிரகாஷ் கூறியதை வைத்து உண்மைகளை கண்டறித்து இப்போது விசாரணைகளை துவக்கியுள்ளது கர்நாடகா அரசு, சிறையில் விதிமுறைகளை மீறியது குறித்த குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சசிகலாவிற்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு என்றே சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.