காஷ்மீருக்கு எம்.பிக்கள் குழு... 'பியூட்டிபுல் காஷ்மீர்' பாடிய அதிமுக நவநீதகிருஷ்ணனுக்கு நோ சான்ஸ்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் நிலமைகளைப் பார்வையிட செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவில் அதிமுக எம்பி வேணுகோபால், திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீர் விவாதத்தின் போது, காஷ்மீர் ... பியூட்டிபுல் காஷ்மீர்' என பாட்டுப்பாடிய அதிமுகவின் நவநீதகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதால் பிரிவினைவாதிகள் வன்முறையை தூண்டிவிட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களை தினமும் நடத்த வேண்டும் என்பதற்காக பிரிவினைவாதிகள் சுமார் ரூ.30 கோடி வரை செலவு செய்தனர்.
வன்முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு சமரச முயற்சிகளில் ஈடுபட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 2 முறை காஷ்மீர் சென்று ஆய்வு மேற்கொண்டார். காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலைத் தடுக்க அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மத்திய அமைச்சர்கள்
இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அனைத்து கட்சிக் குழுவை உருவாக்கி உள்ளது. இக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ஜிதேந்திர சிங் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுனா கார்கே, அம்பிகா சோனி இடம் பெற்றுள்ளனர். ஐக்கிய ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா ஆகியோர் அனைத்துக் கட்சிக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புறக்கணிப்பு
ஆனால் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற மறுத்துவிட்டன.
நவநீதகிருஷ்ணனுக்கு நோ சான்ஸ்
அ.தி.மு.க. சார்பில் பி.வேணுகோபால், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா அக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான விவாதத்தின் போது, அந்த மக்களின் துயரத்தைப் பற்றி பேசாமல்.... காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என பாடிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இக் குழு நாளை மறுநாள் காஷ்மீர் செல்கிறது. அங்கு பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளனர்.