மீனவர்கள் விவகாரம்.. முதல் முறையாக இலங்கையை கண்டித்தார் சுஷ்மா சுவராஜ்!
டெல்லி: தமிழக மீனவர்கள் விவகாரத்தில் உணர்ச்சிகளை தூண்டும் பேச்சுக்களை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஓராண்டில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவு பெரிய அளவில் வெளிப்படைத்தன்மை கொண்டது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இருதரப்பிலும் நான்கு முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். சமீபத்தில் இருதரப்பிலும் மீனவர்களுக்கு இடையில் ஒரு இருதரப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையை இலங்கை தரப்பினர் நிராகரித்து உள்ளனர். மீனவர்கள் பிரச்னையை பொறுத்தவரை எங்கள் அரசாங்கத்துக்கு நல்ல புரிதல் உள்ளது.
மீனவர்கள் கைது
இருதரப்பிலும் எல்லை கடந்து மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைக் கடந்தும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தும் மீன் பிடிக்கின்றனர். இருதரப்பிலும் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். எனவே, இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறோம்.
பேசக்கூடாது
இலங்கையின் தரப்பில் இருந்து அடிக்கடி உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அந்த அறிக்கைகளும், பேச்சுக்களும் சுமுகமான தீர்வு பிறக்கும் வழிகளை அடைத்து விடுகிறது. உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இது இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னை. அதனால், இதனை மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டும்" என்றார்.
தடுமாற்றம் இல்லை
'பாகிஸ்தான் குறித்த மிகத் தெளிவான கொள்கையை மத்திய அரசு கொண்டுள்ளது. இதில் எந்தக் குழப்பமோ, தடுமாற்றமோ இல்லை. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கடந்த ஆண்டு டெல்லி வந்தபோது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு நாடுகளும் மூன்று கொள்கைகளை முடிவு செய்தன. இந்த மூன்று கொள்கைகளும் சிம்லா மற்றும் லாகூர் பிரகடனங்களிலும் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளன.
பேச்சுவார்த்தை
முதலாவது, பேச்சுவார்தை மூலம் ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்க நாம் தயார். இரண்டாவது, நமக்குள் (இந்தியா-பாகிஸ்தான்) மட்டுமே இப்பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். எந்த மூன்றாவது நாடும் மத்தியஸ்தம் செய்யக் கூடாது. மூன்றாவது, பயங்கரவாதத்தையும் வன்முறையையும் ஒதுக்குவதன் மூலம் நல்லிணக்கச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இந்த மூன்று கொள்கைகளின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று பாகிஸ்தானிடம் தொடர்ந்து கூறி வருகிறோம்.
39 இந்தியர்கள்
இந்த ஓராண்டில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பெருத்த வெற்றி அடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்த அரசாங்கம் மொத்தம் 101 நாடுகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஈராக் நாட்டில் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று அங்கிருந்து தப்பித்த ஒருவர் கூறுகிறார் என்பது உண்மைதான். ஆனால், எனக்கு கிடைத்த ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் அங்கு சிறைப்பட்டுள்ள 39 இந்தியர்களும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.