இதுக்கு பெயர்தான் தேசப்பற்றா?: இப்படி பேசிய சாத்வி பிராச்சி மீது ஏன் தேச துரோக சட்டம் பாயவில்லை?
டெல்லி: பாகிஸ்தான் வாழ்க என்றும், தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷமிட்டதாகவும் கூறப்படும் சம்பவத்தில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தலைவர் கன்யா குமார் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவரும், பெண் துறவியுமான சாத்வி பிராச்சி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது.
கன்யா குமாருக்கு எதிராக தேசத்துரோக பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சாத்வி பிராச்சி கூறிய கருத்து ஒன்று, சமூக வலைத்தளங்களி்ல் தீயாக பரவி வருகிறது.
மும்பையில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் மும்பையில் கொடூர தாக்குதல் நடத்தியபோது, மகாராஷ்டிராவில் தீவிரவாத ஒழிப்பு படை தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே புல்லட் ப்ரூப் சட்டை போட்டிருந்தபோதும், குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இதுகுறித்த ஹிந்தி டிவி சேனல் விவாத நிகழ்ச்சியின்போது, மவுலானா ஹுசைன் என்பவர் பிராச்சியிடம், கர்க்கரே குறித்து கருத்து கூறுமாறு கேட்கிறார். அதற்கு, ஹேமந்த் கர்க்கரே ஒரு தேச தியாகி என்று கூற முடியாது. சாமியார் சாத்வி பிரக்யாவை ஜெயிலில் தள்ளினார் அல்லவா, அந்த சாபம் அவரை பழிவாங்கிவிட்டது, என்று பிராச்சி கருத்து கூறியுள்ளார்.
இந்த வீடியோ கிளிப்பிங்சை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துவரும் நெட்டிசன்கள், கன்யாகுமாருக்கு ஒரு நியாயம், சாத்விக்கு ஒரு நியாயமா என்று கேட்டு அவர்மீதும் தேசதுரோக சட்டத்தை பாய்ச்சுமாறு கூறிவருகிறார்கள்.
மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை நடத்திய கர்க்கரே தலைமையிலான டீம், சாத்வி பிரக்யா தாகூர் மற்றும் லெப்டினன்ட் கர்னர் புரோகித் ஆகியோரை கைது செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.