சசிகலாவுக்கு அடுத்த நெருக்கடி.. சிறையில் சலுகை பெற்றது உண்மை.. கர்நாடக விசாரணை கமிஷன் பரபர அறிக்கை
Recommended Video

பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என்று கர்நாடக அரசிடம் தாக்கல் செய்த விசாரணை குழு அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சசிகலா வெளியே ஷாப்பிங் சென்றதாகவும், சிறைக்குள் அவருக்கு சிறப்பு சமையல், மெத்தை விரிப்புகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி பரபரப்பு அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. யாக இருந்த சத்தியநாராயணராவிடம் வழங்கினார்.

விசாரணை குழு அமைப்பு
அந்த அறிக்கையில் சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி கொண்டு சசிகலாவுக்கு சட்டவிரோதமாக இந்த வசதிகள் செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில், இதுபற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உயர்மட்ட குழுவினர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறிய அதிகாரி ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான சத்தியநாராயணராவ் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

4 மாதங்களுக்கு பிறகு அறிக்கை
ஒரு வாரத்தில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி அந்த குழுவுக்கு முதலில் கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பின்னர் அந்த குழுவுக்கு மேலும் கால அவகாசத்தை அரசு வழங்கியது. மொத்தம் 2 தடவை இந்த குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை அறிக்கையை சமீபத்தில் கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தது.

உறுதி செய்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி
இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை கர்நாடக அரசு வெளியிடவில்லை. ஆனால் தமிழ் பத்திரிகையாளர்கள் சிலர் இதுபற்றி உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் தனிப்பட்ட முறையில் கேட்டபோது, வினய்குமார் குழு விசாரணை நடத்தி அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அடுத்த முறை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். இல்லையெனில் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அமல்படுத்த நானே முடிவு எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு சிக்கல்
பரப்பனஅக்ரஹரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததும், மேலும் சிறையில் பல முறைகேடுகள் நடந்ததும் உண்மை தான் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அறிக்கையிலுள்ள அம்சங்களை இப்போதே கூற முடியாது என ராமலிங்க ரெட்டி தெரிவித்துவிட்டார். ஏற்கனவே வருமான வரித்துறையின் ரெய்டுகளால் கலங்கியுள்ள சசிகலாவுக்கு, இந்த முறைகடு புகார் மற்றொரு அடியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications