தவறான தகவல்களை அளிக்கும் வாக்காளர்களுக்கு ஓராண்டு சிறை: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
அடுத்தாண்டு நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக சரியான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாநில தேர்தல் ஆணையாளர்களிடம் தவறுகளே இல்லாத நேர்மையான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி தலைமை தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
அதற்கான நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது தேர்தல் கமிஷன். அதில் வாக்காளர்கள் தங்களை பற்றிய தகவல்களை மிகச்சரியாக அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வேளை வாக்காளர்கள் தவறான தகவல்களை கொடுத்திருந்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஓராண்டு வரை சிறைத் தண்டனை பெற்று கொடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் சுமார் 76 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் 18 வயது பூர்த்தியானவர்கள் கொண்ட புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். ஆன்லைன் மூலமாகவும் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கை 80 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்களை யார் வேண்டுமானாலும் மனு கொடுத்து நீக்கி விடலாம் என்ற நிலை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வாக்காளரே மனு கொடுத்தால்தான் அவர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
சமீபத்தில் டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஏராளமானவர்களின் பெயர்கள் இப்படி நீக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப் பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் கமிஷன் நேற்று எடுத்துள்ள நடவடிக்கையால் இனி யார் பெயரையும் எளிதில் நீக்க முடியாது என நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.