2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 6 தொகுதிகளில் விறுவிறு வாக்குப் பதிவு!!
இம்பால்: லோக்சபா தேர்தலில் 2-வது கட்டமாக வடகிழக்கு மாநிலங்களில் 6 தொகுதிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. நாகலாந்தில் 71% வாக்குகள் பதிவாகின.
முதல் கட்ட லோக்சபா தேர்தல் நேற்று முன் தினம் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 6 தொகுதிகளில் நடைபெற்றன. அசாமில் 72% வாக்குகளும், திரிபுராவில் 84% வாக்குகளும் பதிவாகின. முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவும் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக முடிவடைந்தது.
6 தொகுதிகளில் தேர்தல் இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக இன்று நாகாலாந்து, மணிப்பூரில் தலா 1 தொகுதியிலும் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மேகாலயாவில் தலா 2 தொகுதிகளிலுமாக மொத்தம் 6 தொகுதிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
காலை முதல் நீண்ட வரிசை
காலை 6 மணி முதலே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர்.
அருணாசல சட்டசபை..
மேலும் அருணாசலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவும் 49 தொகுதிகளில் நடைபெற்றது. இம்மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.
நாகாலாந்து
நாகாலாந்தில் ஒரே ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு 3 வேட்பாளர்கள்தான் போட்டியிட்டனர். நாகா மக்கள் முன்னணியின் சார்பில் அம்மாநில முதல்வர் நெய்பியூ ரியோ, காங்கிரஸ் கட்சியின் கேவி பூஷா, இந்திய சோசலிஸ்ட் கட்சியின் அகேயூ அச்சுமி ஆகியோர் போட்டியிட்டனர்.
மணிப்பூர்
மணிப்பூர் புறநகர் தொகுதியில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 10 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இத் தொகுதியில் 327 வாக்குச் சாவடிகள் அதிகபதற்றமானவை என்றும் 791 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை- 28 மட்டுமே அமைதியானவை என்றும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
அருணாசல்
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 2 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ் பிரதான கட்சிகளாகும்.
மேகாலயா
மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் துரா ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தொகுதிகளில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பலத்த பாதுகாப்பு
வாக்குப் பதிவு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலையில் நாகலாந்தில் 71% வாக்குகளும் அருணாசலம், மேகலாயாவில் 60% வாக்குகளும் பதிவாகி இருந்தன.