நாட்டுக்காக எங்கள் போராட்டம் தொடரும்.. அச்சப்படவோ, அடிபணியவோ மாட்டோம்: சோனியா காந்தி சூளுரை
டெல்லி: நாங்கள் அச்சப்படவோ, அடிபணியவோ மாட்டோம் என்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற விழாவில் அப்பதவியில் இருந்து விடைபெறும் சோனியா காந்தி பேசினார்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது அச்சத்தில் இருந்தேன். பதவியேற்றபோது எனது கைகள் நடுங்கியது ஞாபகம் உள்ளது.
காங்கிரஸ் கட்சியை வழி நடத்துவேனா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதனை முறியடித்து இத்தனை ஆண்டு காலம் பயணித்துள்ளேன். இப்போது
காங்கிரஸ் கட்சி புதிய திசையை நோக்கி பயணிக்கிறது.
காங்கிரஸ் வளர்ச்சி
பல்வேறு சவால்கள் நம் முன் காத்து கிடக்கிறது. சவால்களை ராகுல் காந்தி சாதனையாக்குவார் என நம்புகிறேன். நான் காங்கிரஸ் தலைவரானபோது காங்கிரஸ் 3 மாநிலங்களில்தான் ஆட்சியில் இருந்தது. மத்தியில் ஆட்சியை பிடிக்க ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் மத்தியில் தொடர்ந்து 10 வருட காலம் ஆட்சியில் இருந்ததோடு, சுமார் இரு டஜன் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
நாட்டுக்காக தியாகம்
இந்திரா காந்தி என்னை ஒரு மகள்போலதான் பாவித்தார். அவர் கொல்லப்பட்டபோது எனது தாயை பறிகொடுத்ததை போலதான் உணர்ந்தேன். எனது கணவர் ராஜிவ் காந்தியையும் நாட்டுக்காக பலி கொடுத்தேன்.
அச்சமான சூழ்நிலை
நாங்கள் பல தேர்தல்களில் தோற்றிருக்கலாம். ஆனால், நாங்கள் அச்சப்படுபவர்களோ, அடிபணிபவர்களோ கிடையாது. இந்தியாவின் ஆன்மாவுக்காக எங்கள் போராட்டம் தொடரும். இந்தியாவின் அடிப்படை கொள்கைகள் தினமும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஒரு அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இதற்கான போராட்டங்களை எதிரொலிக்கும். எந்த வித தியாகத்திற்கும் காங்கிரஸ் தயாராக உள்ளது.
வலிமையான ராகுல் காந்தி
ராகுல் காந்தி எனது மகன். எனவே அவரை நானே புகழ்வது சரியாக இருக்காது. ஆனால் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே தனது குடும்பத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை எதிர்கொண்டு தாங்கி வளர்ந்தவர். அரசியலுக்கு வந்த பிறகும், தனிப்பட்ட தாக்குதல்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். இதுபோன்ற நிகழ்வுகள், ராகுல் காந்தியை வலிமையான நபராக மாற்றியுள்ளது.
ராகுல் காந்தி மீது நம்பிக்கை
காங்கிரஸ் தலைவராக சுமார் 20 வருடங்கள் பணியாற்றி காலங்கள் ஓடிவிட்டன. கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை காலம் முடிந்துவிட்டது. இன்று, இந்த பொறுப்பிலிருந்து விலகும் நான், எனக்கு ஆதரவு அளித்த, என்னை நம்பிய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ராகுல் காந்தி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். ராகுல் காந்தி இந்த கட்சியை முழு மனதோடு முன்னேற்றுவார். இவ்வாறு சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் உணர்ச்சிமிகுந்தவராக காணப்பட்டார்.