10 வருஷத்துக்கு நாங்க "பழைய வீட்டில்"தான் இருப்போம்.. சொல்கிறார் நாயுடு!
ஹைதராபாத்: 10 வருடத்துக்கு ஹைதராபாத்திலேயே ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் தொடர முடியும். அதை யாரும் எதிர்க்க முடியாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா இதைத் தெளிவாகக் கூறியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மாநிலப் பிரிவினை தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் சட்டப்பூர்வமாகவே தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநிலப் பிரிவினைக்குப் பின்னர், ஆந்திராவும், தெலுங்கானாவும் அரசு ஊழியர்களை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், நேற்று ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்கு முன்பாக ஒரு வெள்ளை அறிக்கையையும் ஆந்திர அரசு வெளியிட்டது.
சட்டத்தை தெலுங்கானா மதிக்க வேண்டும்
சந்திப்புக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு கூறுகையில், ஆந்திர மாநில மறு சீரமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். இந்த சட்டத்தை தெலுங்கானா மாநிலம் ஏற்று மதிக்க வேண்டும். அப்போதுதான் பல சிக்கல்களை எதிர்காலத்தில் தவிர்க்க முடியும்.
அநீதி இழைத்த காங்கிரஸ்
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஆந்திராவை பிரித்து மாபெரும் அநீதியை இழைத்து விட்டது.
ஹைதராபாத்தை உயர்த்தியது நான்தான்
ஹைதராபாத் இன்று ஐடி தலைநகரமாக திகழ்கிறது. அந்த நிலையை ஏற்படுத்தியவன் நான்தான். பொருளாதார நகரமாக அதை எனது ஆட்சிக்காலத்தில் மாற்றினேன். ஹைதராபாத்தை ஒரு பிராண்ட் ஆக மாற்றியதும் நான்தான்.
10 வருடம் எங்களை அசைக்க முடியாது
சட்டப்படி 10 வருடத்திற்கு நாங்கள் ஹைதராபாத்தில்தான் இருப்போம். எங்கு போவது, எப்படி செயல்படுவது என்பது குறித்து நாங்கள் உரிய நேரத்தில் முடிவெடுப்போம்.
ரூ. 5 லட்சம் கோடி தேவை
ஹைதராபாத்தைப் போல ஒரு தலைநகரை புதிதாக நிர்மானிக்க ரூ. 5 லட்சம் கோடி தேவைப்படும். இதை யார் தருவார்கள்...?
காங்கிரஸில் எல்லாமே குழப்பம்
இதுகுறித்தெல்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொஞ்சமும் சிந்திக்கவில்லை. அதுகுறித்து திட்டமிடப்படவில்லை. அனைத்து அரசியல் கட்சியினருடனும் கலந்தாலோசித்து ஒருமித்த முடிவை எடுக்க முயற்சிக்கவில்லை. இதுவே பல குழப்பங்களுக்குக் காரணம்.
அவசர கதியில் சட்டம்
இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காணாமல் அவசர கதியில் மாநில சட்டசபையிலும், மத்தியிலும் பல தீர்மானங்கள், சட்டங்களைக் கொண்டு வந்து நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்றார் நாயுடு.