மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது - 78.36% வாக்குகள் பதிவு
மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவுமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி 78.36% வாக்குகள் பதிவாகியுள்ள
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற 5ஆம் கட்ட சட்டசபை தேர்தல் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 6 மணி நிலவரப்படி 78.36% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இந்த தொகுதிகளில் 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர்.
மேற்கு வங்கம் மாநிலத்தின் இந்த 5 ஆம் கட்ட தேர்தலுக்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜக ஆளும் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமீறல் காரணமாக முக்கிய பிரமுகர்களின் பிரசாரத்திற்கு தடை விதிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
நடந்து முடிந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது சிட்டால்குச்சியில் வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன், மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இதனால், 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் புதன்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற 45 தொகுதிகளில் 17 தனித் தொகுதிகள்; 3 பழங்குடி தொகுதிகள். இன்று தேர்தலை எதிர்கொள்ளும் 45 தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 32ல் வென்றது.
சிலிகுரி மேயரும் மூத்த இடதுசாரி தலைவருமான அசோக் பட்டாச்சார்யா, மாநில அமைச்சர்கள் கெளதம் தேப், பிரத்யா பாசு மற்றும் பாஜகவின் சமிக் பட்டாச்சார்யா ஆகியோர் இன்றைய தேர்தலை எதிர்கொள்ளும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இன்று காலையில் தொடங்கிய 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசார நேரம் இரவு 7 மணியாக குறைக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரவு 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை எந்த பிரசாரமும் மேற்கொள்ள அனுமதி இல்லை எனவும், வாக்குப்பதிவுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பே பிரசாரங்களை முடித்து கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!