மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் - ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ் சி வோட்டர் நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி உள்ளது.
அந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்துள்ளார் மமதா பானர்ஜி.
இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பாஜக தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மீண்டும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்து களமிறங்கியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.
கேரளாவில் பினராயி விஜயன் மகுடம் சூட்டுவார்.. ஒற்றை இலக்கில் பாஜக... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க மக்களிடம் அதிக செல்வாக்கு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி அமைப்பார் என்று ஏபிபி சி வோட்டர் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஏபிபி சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 152 முதல் 164 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தம் 42.1 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவிற்கு 109 முதல் 121 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. பாஜகவிற்கு மொத்தம் 39% வாக்குகளைக் கைப்பற்றும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்க அரசியலில் பாஜக கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 14 முதல் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 15.4% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.