கவர்னர் பதவியை ராஜினாமா செய்த நாராயணன் சென்னை திரும்பினார்.. சிபிஐ விசாரிக்கவில்லையாம்!
சென்னை: மேற்கு வங்க மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த எம்.கே. நாராயணன் தனது மனைவி பத்மினியுடன் கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையை காலி செய்துவிட்டு சென்னை திரும்பினார். இனி அவர் சென்னையிலேயே வசிப்பார்.
கேரளத்தைச் சேர்ந்தவரான நாராயணன் சென்னையில் படித்து, வளர்ந்தவர்.
காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்தார்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்ததையடுத்து முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந் நிலையில், கடந்த 30ம் தேதி நாராயணனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியது தொடர்பான ஊழல் குறித்து இவரிடம் சில நாட்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
80 வயதான நாராயணனின் ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை ஏற்று கொண்டதோடு பிகார் ஆளுனர் டி.ஓய். பாடீலிடம் மேற்கு வங்க ஆளுனர் பதவியை கூடுதல் பொறுப்பாக வழங்கினார்.
இதையடுத்து நாராயணன் நேற்று கவர்னர் மாளிகையை விட்டு கிளம்பினார். முன்னதாக அவருக்கு கொல்கத்தா போலீஸார் ஆளுனர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி மேற்கு வங்கத்தின் 24வது ஆளுநராக எம்.கே. நாராயணன் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த நாராயாணனிடம் நிருபர்கள், ஹெலிகாப்டர் பேர வழக்கில் சி.பி.ஐ என்னிடம் விசாரணை ஏதும் நடத்தவில்லை என்று கூறினீர்கள். தற்போது விசாரணை நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளதே என்று கேட்டனர்.
இதற்கு மிகக் கோபமாக பதிலளித்த நாராயணன், சி.பி.ஐ எது பற்றியும், எந்த விசாரணையும் என்னிடம் நடத்தவில்லை. நீங்கள் தான் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.