என்ன மட்டமான ஆட்டம் இது? ஐபிஎல் நினைப்பா? ரொம்ப மெத்தனம்! முக்கிய நேரத்தில் இந்திய அணி செய்த 2 தவறு
ஜெய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், என்னதான் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், முக்கியமான நேரத்தில் பேட்ஸ்மேன்கள் 2 தவறுகளை செய்தனர். இதனால் நியூசிலாந்து அணி, கடைசி கட்டத்தில், "மரண பயம் காட்டிட்டாங்க பரமா" என்று இந்திய ரசிகர்களை புலம்ப வைத்தது.
Recommended Video
நேற்று, ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது நியூசிலாந்து. நான் ஒரு ராசியில்லாத ராஜா என கிங் கோலி புலம்ப காரணமாக இருந்தது டாஸ்தான். அவர் கேட்பது மட்டும் விழவே செய்யாது. அது என்ன மாயமோ தெரியாது. தலை கேட்டால் பூ விழும், பூ கேட்டால் தலை விழும்.
இதனால் பல நேரங்களில் அணி தலையில் துண்டு விழுந்துள்ளது.
தீங்கு நேர்ந்துவிட்டது.. கவலையாக இருக்கிறது.. ட்வீட்டரில் கவலைப்பட்ட பிடிஆர்.. யாரை சொல்கிறார்?
டாஸ் வென்ற ரோகித் சர்மா
அதேநேரம், ஐபிஎல்லில் 5 கப் வின் பண்ண ராசி என்கிட்ட இருக்கு என்பதை ரோகித் சர்மா, முழு நேர கேப்டன் பொறுப்புக்கு வந்த முதல் போட்டியிலேயே டாஸ் வெற்றி பெற்று நிரூபித்து விட்டார். ஒரு வகையில் அது இந்திய அணி வெற்றிக்கு அடித்தளம் போட்டது. இந்திய பந்து வீச்சாளர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்து 190 ரன்களை கூட எட்டும் நிலையில் இருந்ததை மாற்றி மடக்கிப் போட்டனர்.
சூர்யகுமார் யாதவ்
சில ஃபீல்டிங் மிஸ்சிங் இருந்ததை தவிர மற்றது எல்லாம் ஓகே. ஆனால் பேட்டிங்கில்தான் இரு தவறுகளை செய்தனர் இந்திய வீரர்கள். எப்போதுமே பெரிய ஸ்கோரை துரத்தும்போது - ஆம், ஜெய்ப்பூர் மைதானம் பெரிது என்பதால் இதுவே பெரிய ஸ்கோர்தான் - செட்டான ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நிற்க வேண்டும். இதுதான் டி20 டெம்ப்ளேட். நேற்றைய போட்டியில் நன்கு ஆடியது சூர்யகுமார் யாதவ். ரோகித் அவுட்டாகிவிட்டதால் அவர் போட்டியை முடித்து தந்திருக்க வேண்டும். ஆனால் ஸ்டைலிஷ் ஷாட் முயல்வதாக நினைத்து அவுட்டானார்.
முக்கிய கட்டம்
ரன் ரேட் நன்றாக இருந்த அந்த நிலையில், ஸ்வீப் ஷாட் அடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இல்லை. ஆனால் அதை அவர் செய்தார். 16 வது ஓவரின் 4வது பந்தில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் இதை முயன்று பார்த்தார். இத்தனைக்கும் அவர் நினைக்கும் திசைக்கெல்லாம் பந்து போய்க் கொண்டுதான் இருந்தது. அப்படியும் ரிஸ்கான இந்த ஷாட்டை அவர் ஆடினார். ஏதோ ஏப்ப சாப்ப பந்து வீச்சாளருக்கு எதிராக ஆடினாலும் ஓகே. டிரண்ட் பவுல்ட்டுக்கு எதிராக இப்படி ஒரு ஷாட்டை ஆடி பௌல்ட் ஆனார்.
பந்துக்கு வலிக்காமல் அடித்த பேட்ஸ்மேன்கள்
சூர்யகுமார் யாதவ் அவுட்டான பிறகு இந்திய அணிக்கு நடுக்கம் ஆரம்பித்தது. அதிரடி வீரர் ரிஷப் பண்ட் பேட்டில் அது ஏனோ நேற்று பந்து படவே மாட்டேன் என்று அடம் பிடித்தது. அவர் கொம்பன் யானை போல பேட்டை ஓங்கி அடித்தாலும், அது கும்கி யானை போலதான் பந்தில் பட்டு சிங்கிள் ரன்கள் கிடைத்தன. இன்னொரு பக்கம் ஸ்ரேயாஷ் ஐயர், எருமை மாட்டை, இருட்டில், தேடுவதை போல பந்தை தடவி விட்டுக் கொண்டிருந்தார். பிறகு 8 பந்துகளில் 5 ரன்களை எடுத்து விட்டு அவரும் நடையை கட்டினார்.
வெங்கடேஷ் ஐயர்
இதனால் கடைசி ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்து சேர்ந்தது இந்திய அணி. ஒரு பக்கம் பண்ட், இன்னொரு பக்கம் வெங்கடேஷ் ஐயர். நல்லவேளையாக டேர்ல் மிட்சல் பந்து வீச வந்தார். பெர்குசனுக்கோ, டிரெண்ட் போல்டுக்கோ ஓவர்கள் மிச்சமில்லாதது யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. ஆனால் சும்மா கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்த கதையாக, அவரையும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஸ்லிப் திசையில் நின்ற ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இத்தனைக்கும், அந்த ஓவரின் முதல் பந்தை அழகாக வெங்கடேஷ் ஐயர் பவுண்டரி விளாசினார். ஈஸியாக அடிக்க வேண்டியதை ஸ்டைலிஷாக ஆடுவதாக நினைத்து கையில் கொடுத்து வெளியேறினார் வெங்கடேஷ் ஐயர்.
ரிஷப் பண்ட் பவுண்டரி
அக்சர் பட்டேல் ஒரு சிங்கிள்தான் எடுக்க, பிரஷர் மாத்திரையை கையில் எடுத்தனர் நமது ரசிகர்கள். நல்ல வேளையாக, பந்தில் பேட் படாவிட்டால் என்ன.. நானே பந்து இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என்று, நடந்து சென்று மிட்-ஆப் திசையில் பந்தை தூக்கி விட்டு பவுண்டரி அடித்தார் ரிஷப் பண்ட். இந்தியா வென்றது.
கவனிக்க வேண்டிய விஷயம்
இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவும், வெங்கடேஷ் ஐயரும் ஐபிஎல் நினைப்பை விட்டு வெளியே வரவில்லை என்பதைத்தான் அந்த இரு ஷாட்கள் தெளிவாக காட்டின. சர்வதேச போட்டிகளில் அனுபவம் இல்லை என்பதை முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை கோட்டை விட்ட அவர்கள் செயல்பாடு நிரூபித்தது. இருவருமே சிறப்பான பேட்ஸ்மேன்கள். எந்த பவுலரும் அஞ்சும் பேட்ஸ்மேன்கள். ஆனால் விக்கெட்டை இப்படி தூக்கி கொடுத்து போயிருக்க கூடாது. இதை ராகுல் டிராவிட் கருத்தில் எடுத்திருப்பார் என நம்பலாம். ஏனெனில் இருவரும் இப்படி அவுட்டான போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேமரா மேன்களின் அத்தனை கேமராவும் ராகுல் டிராவிட்டின் முகத்தைதான் ஃபோகஸ் செய்தன. அவரும் நோட்ஸ் எடுக்க தவறவில்லை. பார்ப்போம், அடுத்த போட்டியில் தவறுகளை திருத்துகிறார்களா என்பதை?