ஜீவிதம் நஷிஞ்சு.. கடவுளின் தாய்வீட்டை ஆட்கொண்ட வெள்ளம்.. கேரள சோகம்!
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அவர்கள் வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும்.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அவர்கள் வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும். கடவுளின் தாய் வீடு என்று அழைக்கப்படும் அந்த மாநிலம் மொத்தமாக ஒடிந்து போய் இருக்கிறது.
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், மீண்டும் பெரிய அளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் இன்னும் அங்கே பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெரிய அளவில் மழை பெய்கிறது. 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
எவ்வளவு பெரிய வெள்ளம்
கேரளாவில் தற்போது வந்திருக்கும் வெள்ளம் சுதந்திரம் அடைந்த பின் கேரளாவில் ஏற்படும் மிகப்பெரிய வெள்ளம் ஆகும். அதோடு இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளங்களில் இந்த கேரளா வெள்ளமும் மிகப்பெரியது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் கேரளாவின் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது சென்னையில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தை விட 6 மடங்கு பெரிய வெள்ளம் ஆகும்.
ஏன் இவ்வளவு பெரிய வெள்ளம்
கேரளாவில் இவ்வளவு பெரிய வெள்ளம் வந்ததற்கு ஒரே காரணம் மழைதான். இந்த அளவிற்கு அங்கே மழை பெய்யும் என்று அம்மாநில அரசு, வானிலை ஆராய்ச்சி மையம் கூட நினைக்கவில்லை. கடந்த 50 வருடங்களில் பெய்யாத பெரிய அளவிலான மழை கேரளாவில் பெய்துள்ளது. அதேபோல் கேரளாவில் உள்ள 26 அணைகள் மொத்தமாக நிரம்பி தண்ணீரை எங்கே வெளியிடுவது என்று தெரியாத நிலைக்கு சென்றுள்ளது. இதுதான் வெள்ளத்திற்கு காரணம் ஆகும்.
நாட்கள்
இதில் சோகம் என்னவென்றால், கேரளாவில் கடந்த 14 நாட்களாக வெள்ளம் உள்ளது. சென்னையில் மூன்று நாட்களாக இருந்த வெள்ளமே பெரிய சீரழிவை ஏற்படுத்தியது. கேரளாவில், 14 நாட்களாக தண்ணீர் வெளியேறவில்லை. மாறாக தண்ணீர் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நொடிக்கு நொடி மழையின் அளவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கொடூரம்
இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், அங்கு அரசால் கூட சரியாக மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை. ஹெலிகாப்டரில் மீட்பு செய்ய கிளம்பினால் எங்கு இருந்து தொடங்குவது , ஹெலிகாப்டரை எங்கே நிறுத்துவது என்ற நிலை தெரியாமல் போய் உள்ளது. எந்த நகரத்திற்குள்ளும் மீட்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. என்னதான் செய்வது என்று தெரியாத சூழ்நிலைக்கு கடவுளின் தாய்வீடு மாட்டியுள்ளது.
இங்கே நடந்தது அங்கே நடக்கவில்லை
சென்னை வெள்ளத்தின் போது நடந்த மீட்புப்பணிகள் அளவிற்கு அங்கே நடக்கவில்லை. ஆம், இருப்பதிலேயே மிகவும் மோசமான தொகையை அவர்களின் திரைத்துறை நிவாரண நிதியாக கொடுத்துள்ளது. அதேபோல் எந்த ஹீரோவும், ஹீரோயினும் களத்தில் இறங்கி மீட்பு பணி செய்யவில்லை. மிக முக்கியமாக, தமிழ்நாட்டில் நடந்ததை போல அங்கு மக்கள் இறங்கி மீட்பு பணி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. ஏனென்றால் எல்லா மாவட்டமும் வெள்ளத்தில் பாதித்துள்ளது.
கைவிடப்பட்டுவிட்டனர்
சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது லட்சக்கணக்கில் கேரளாவில் இருந்து மக்கள் வந்து உதவி செய்தார்கள். அப்போது இருந்த கேரளா முதல்வர் மீட்பு பணி உதவி தொடங்கி பல உதவிகளை தமிழகத்திற்கு அனுப்பினார். மலையாள மக்கள் களமிறங்கி தமிழகத்திற்காக உதவினார்கள். ஆனால் அவர்கள் செய்த அளவிற்கு தமிழகத்தில் இருந்து உதவிகள் செல்லவில்லை என்றுதான் கூறவேண்டும்.
என்ன செய்ய வேண்டும்
பல தவிர்க்க முடியாத காரணத்தால், கேரளா வெள்ளம் குறித்து தமிழக மக்களுக்கு பெரிய அளவில் தெரியாமல் போய் உள்ளது. கடந்த நான்கு நாட்களாக மட்டுமே, கேரளா வெள்ளம் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பேசுவதை நிறுத்திவிட்டு உடனடியாக கேரளா மக்களுக்காக உதவுவதே அவர்களுக்கு நாம் செய்யும் சிறந்த நன்றிக் கடனாக இருக்கும்.