உச்சகட்ட பாதுகாப்பு.. விழிபிதுங்கும் மக்கள்.. காஷ்மீரில் நடக்கும் சம்பவங்கள் "என்ட் டூ என்ட்" விவரம்
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் ராணுவத்தினர் குவிப்பு முதல் 144 தடை உத்தரவு வரை நடந்தது என்ன?
ஜம்மு- காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்கு செல்லும் வழியில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் கண்ணிவெடிகள் அண்மையில் இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் பாகிஸ்தான் ஆயுத கிடங்கில் தயாரிக்கப்பட்டது.
இதனால் அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது என்பதால் அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சொந்த ஊர்களுக்கு திரும்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவத்தினர்
காஷ்மீரில் விடுதியில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை இந்திய எல்லையில் ஊடுருவினர். இதையடுத்து அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
பேட் அமைப்பினர்
இதனிடையே வரும் சுதந்திர விழா அன்று காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் 370, 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை ரத்து செய்வதாகவும் தகவல்கள் பரவின. இதை மறுத்தார் ஆளுநர் சத்யபால் சிங். இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இந்தியாவில் ஊடுருவதற்காகவே பாகிஸ்தானால் அமைக்கப்பட்ட "பேட்" அமைப்பினர் ஊடுருவினர்.
உடல்கள் மீட்பு
இதையும் இந்திய ராணுவத்தினர் சாதுர்யமாக முறியடித்து 7 பேரையும் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை மீட்டு செல்ல இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு அனுமதி அளித்தது.
வீட்டுக் காவல்
ஆனால் பாகிஸ்தானோ இதை மறுத்தது. அவர்கள் தங்கள் நாட்டினர் அல்ல என்றும் இந்தியா பொய் பிரசாரம் செய்கிறது என்றும் அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
அமைச்சரவைக் கூட்டம்
இதையடுத்து 144 தடையுத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இணையதள சேவைகள், செல்போன் சேவைகள் முடக்கப்பட்டுவிட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.