தமிழர்களுக்கு சித்தராமையா அளித்த உறுதி என்ன?
பெங்களூரு: உச்ச நீதிமன்றம் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இருந்து தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார்.
பெங்களூரு கலவரத்தையொட்டி அம்மாநில முதல்வர் சித்தராமையாவை தமிழ் சங்கத்தினரிடம் அவரது வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது தமிழ் சங்கத்தினரிடம் சித்தராமையா இந்த உறுதியை அளித்துள்ளார். மேலும் காவிரி தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தமிழ் இளைஞரை தாக்கியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழ் சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் தாமோதரனிடம், தமிழகத்தில் உள்ள கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்குமாறும் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் தமிழக முதலமைச்சரிடம் கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஈ- மெயில் மூலம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழர்கள் வாழும் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேணடும் என்று சித்தராமையா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதையும் தமிழ் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் 1991ம் ஆண்டில் பங்காரப்பா முதல்வராக இருந்த போது, காவிரி நீர் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் 18 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.