வங்கத்தை அதிர வைத்த பெண்.. ஆளும் திரிணாமுலுக்கு சிக்கல்.. யார் இந்த அர்பிதா முகர்ஜி.. பின்னணி தகவல்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில கல்வித்துறை அமைச்சருக்கு நெருக்கமான நபரில் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி பணம் ரொக்கமாக சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஆதாரத்தின் பேரில் கிடைத்த தகவலால், நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில், குறிப்பாக மாநிலத்தின் தற்போதைய கல்வி அமைச்சரான பரேஷ் சி மற்றும் தொழில் அமைச்சர் பர்த்தா சட்டர்ஜி, மானிக் பட்டாச்சாரியா மற்றும் அவர்களுக்கு நெருங்கிய நபர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கட்டுக்கட்டாக பணம்
அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த திடீர் ரெய்டில் அமைச்சர் பர்த்தா சட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜி என்பவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் இருந்து மட்டும் 500 ரூபாய் நோட்டுகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என கோடிக்கணக்கான பணம் இந்த ரெய்டில் சிக்கியது. என்னடா இது அள்ள அள்ள ரூயாய் நோட்டுகள் வந்துகொண்டிருக்கிறது என்பது போல அமலாக்கத்துறை அதிகாரிகள் மலைத்து போயினர். அவர்கள் வங்கி அலுவலர்களை நேரில் அழைத்து பணம் எண்ணும் இயந்திரத்தின் உதவியும் எவ்வளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டனர்.

ரூ.20 கோடி பறிமுதல்
இதில்அர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் சுமார் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். இந்த பணம் 10-ம் வகுப்பு தேர்வின் போது பெறப்பட்ட ஊழல் பணமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேற்கு வங்காளத்தில் நேற்று எண்ணி எண்ணி சோர்வடையும் அளவுக்கு அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து பணம் கண்டெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் யார் இந்த அர்பிதா முகர்ஜி? என்ற கேள்வி இணையம் முதல் அனைத்து இடங்களிலும் விவாதிக்கக்கூடியதாக உள்ளது.

யார் இவர்?
பன்முகத்தன்மை கொண்ட நடிகையாக இருந்த அர்பிதா முகர்ஜி, பெங்காலி, ஒடியா, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் அர்பிதா முகர்ஜி, மேற்கு வங்காளத்தில் மிகவும் புகழ்பெற்ற துர்கா பூஜா குழுவில் கடந்த சில ஆண்டுகளாக மந்திரியின் முகமாக செயல்பட்டு இருந்திருக்கிறார். பர்த்தா சட்டர்ஜி அடிக்கடி அர்பிதா முகர்ஜியின் இல்லத்திற்கு சென்று வரும் நபராகவும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அர்பிதா முகர்ஜி கடந்த 2009-ம் ஆண்டு பெங்காலி சூப்பர் ஸ்டார் ப்ரோசென்ஜித் சாட்டர்ஜியுடன் 'மாமா பாக்னே' படத்திலும், நடிகர் ஜீத்துடன் இணைந்து 2008 இல் 'பார்ட்னர்' படத்திலும் நடித்துள்ளார்.

பாஜக விமர்சனம்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அர்பிதா முகர்ஜிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், மேற்கு வங்காள எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி, தனது ட்விட்டரில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களுடன் அர்பிதா முகர்ஜி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தொடர்பு இல்லை
ஆனால், அமலாக்கத்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கியிருக்கும் நபர் அதிகாரிகளிடம் தக்க விளக்கத்தை அளிக்க வேண்டும். இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பங்கு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications