கல்லூரி கூட முடிக்காத நீரவ் மோடி கோடிக்கணக்கில் ஏமாற்றியது எப்படி.. அதிர வைக்கும் வரலாறு!
நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சண்டிகர்: நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரின் வரலாறு அதிர வைக்கும் வகையில் இருக்கிறது.
பஞ்சாப் வங்கியிடம் போலியாக உத்திரவாத பாத்திரம் வாங்கி இவர் இந்த மோசடியைச் செய்து இருக்கிறார். வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் இவர் இப்போது சுவிட்சர்லாந்திற்கு ஓடிவிட்டார்.
இவர் வாழ்க்கை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி மாறியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு, நீங்கள் பல கோடி ஏமாற்றப் போகிறீர்கள் என்று கூறியிருந்தால் இவரே நம்பி இருக்க மாட்டார், அப்படிப்பட்ட வாழ்க்கையை இவர் வாழ்ந்துள்ளார்.
ஆசை
இவர் இந்தியாவில் பிறந்தாலும் வளர்ந்தது முழுக்க முழுக்க பெல்ஜியத்தில்தான். ஆம் அதே டைமண்ட் நகரம்தான். ஆனால் இவருக்கும் டைமண்ட் வியாபாரத்திற்கும் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. குடும்பமே அந்த வியாபாரத்தைப் பார்த்தாலும் இவருக்கு இசை மீதுதான் ஆர்வம். இசைத்துறையில் பெரிய ஆளாக மாற வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்.
படிப்பைவிட்டார்
ஆனால் 19 வயதில் கல்லூரி படிப்பை பாதியில்விட்டுவிட்டு வைர வியாபாரத்தில் இறங்குகிறார். அவரது குடும்ப நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியை தொடங்குகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிறுவனத்தைப் பெரிய நிறுவனமாகவும் மாற்றுகிறார்.
பார்முலா
இப்போது எப்படி பஞ்சாப் வங்கியிடம் இருந்து பொய்யாக உத்தரவாத கடிதம் வாங்கினாரா அதேபோல் இதற்கு முன்பும் இப்படி இவர்கள் குடும்பம் செய்து இருக்கிறது. 1999ல் இதேபோல் போலியாக ஏமாற்றி பணம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட புகார்கள் எல்லாம் இப்போது மட்டுமே வெளியே வந்துள்ளது.
உச்சம் தொட்டது
சில வருடங்களிலேயே இவர்களின் நிறுவனம் பெரிதாக வளர்ந்தது. இவர்கள் ஏலம் விட்ட எல்லா நகைகளும் மில்லியன் கணக்கில் சென்றது. 2010ல் 3.56 மில்லியன் டாலருக்கு ஒரு செயின் ஏலம் போனது. 2012ல் 5.1 மில்லியன் டாலருக்கு இன்னொரு நெக்லஸ் ஏலம் போனது. அடுத்த வருடமே உலக பணக்காரர்கள் பட்டியில் இடம்பெற்று, போர்ப்ஸ் பட்டியலிலும் இடம்பிடித்தார்.
பெரிய வரவேற்பு
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இவர்கள் தங்களுக்கு போட்டியாக இருந்த எல்லா எதிரிகளையும் தூக்கி சாப்பிட்டு இருக்கிறார்கள். ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் தொடங்கி எல்லோரும் இவர்களுக்கு வாடிக்கையாளராக இருக்கிறார்கள். கேட் வின்ஸ்லெட் ஆஸ்கார் விழாவிற்குக் கூட இவர்கள் நகையைத்தான் அணிந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
பெரிய ஆள்
போர்ப்ஸ் பட்டியலில் இவர் 1,234 என்ற பேன்சி நம்பரில் இடம்பிடித்தார். இந்தியாவில் இவர் 85 வது நபர் ஆவார். நகைகள் மூலம் மட்டுமே 5 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வருடா வருடம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
ஆரம்பித்த சனி
ஆனால் இந்த 47 வயது பிசினஸ்மேனுக்கும் சறுக்கல் ஆரம்பித்தது. 2014ல் எப்போது போர்ப்ஸ் பட்டியலில் வந்தாரோ அப்போதே சிபிஐ இவரைக் கண்காணிக்க தொடங்கியது. அதே வருடம் இவர் வைர நகைகளை மோசடி செய்து இறக்குமதியும், ஏற்றுமதியும் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் மோசடி
அப்போதுதான் இவர் மீது முதல்முறையாக மோசடி புகார் வைக்கப்பட்டது. 280 கோடி இவர் மோசடி செய்ததாக கூறப்பட்டது. இதன் மீதான விசாரணையே இன்னும் சரியான பாதைக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாயம்
மல்லையா, லலித் மோடி எல்லாம் எப்படி ஓடினார்களோ அப்படித்தான் இவரும் ஓடி இருக்கிறார். சுவிட்சர்லாந்தில் தற்போது இந்திய மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆம் இங்கு விவசாயிகள் லோனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் விஷம் குடிக்கும் போதுதான் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.