உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? தீபக் மிஸ்ராவிற்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றி, சட்ட அமைச்சகம், தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா இவ்வாண்டு, அக்டோபர் 2ம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக யார் நியமிக்கப்பட உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சகம், தீபக் மிஸ்ராவிற்கு கடிதம் எழுதி, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனியாரிட்டி படி, ரஞ்சன் கோகாய், மிஸ்ராவிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். அவர்தான் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் கூட்டாக அளித்த பத்திரிகையாளர் பேட்டியில், தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளை பற்றி விமர்சனம் செய்தனர். இதுபோல உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரஸ் மீட் செய்தது இந்திய வரலாற்றிலேயே அதுதான் முதல் முறையாகும். பிரஸ் மீட் செய்த நீதிபதிகளில் ஒருவர் ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. செல்லமேஸ்வர், மதன் லோக்கூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் பிரஸ் மீட் செய்த மற்ற மூன்று நீதிபதிகளாகும்.
சட்ட அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்னும் பதில் அனுப்பவில்லை. அவர் பதில் அனுப்பும்போது ரஞ்சன் கோகாய் பெயரைத்தான் பரிந்துரைக்க அதிக வாய்ப்புள்ளது என்று சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய தலைமை நீதிபதி பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்பாவது அடுத்த தலைமை நீதிபதி பெயர் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.