பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது ஏன்?
பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது தொடர்பாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம முன்பு சசிகலா ஆதரவாளர்களின் கார்கள் சில திடீரென தாக்கப்பட்டன. இதன் பரபரப்பு பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டில் சரணைடந்தனர். இதற்காக சசிகலா உள்ளிட்டோர் கார் மூலமாக சென்னையிலிருந்து பெங்களூரு கிளம்பி வந்தனர்.
அவர்களுடன் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்தனர். சிறை வளாகம் வந்ததும் சசிகலாவின் கார் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டது. கூட வந்தவர்களின் கார்கள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. அப்போது திடீரென சிலர் அந்தக் கார்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 5 கார்களின் கண்ணாடிகள் உடைந்தன.
இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை லேசாக தடியடி நடத்தி விரட்டியடித்தனர். முக்கியச் சாலை என்பதால் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து டிவி சானல்களுக்கு பேட்டி அளித்த சசிகலா ஆதரவாளர்கள் சிலர், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களைக் குறி வைத்துத் தாக்கியதாக கூறினர். இங்குதான் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் சிலர் கூறுகையில், உண்மையில் தாக்குதல் நடத்தியவர்களும் அதிமுகவினர்தான். அவர்கள்தான் தாக்குதல் நடத்தினர். சசிகலாவுடன் வந்த வாகனங்கள் மட்டும்தான் தாக்கப்பட்டன. தமிழகப் பதிவெண் கொண்ட வேறு எந்த வாகனமும் தாக்கப்படவில்லை. அவை வழக்கம் போலத்தான் போய்க் கொண்டிருந்தன.
உண்மையில் இந்த தாக்குதலைக் காரணம் காட்டி சசிகலாவுக்கு பெங்களூரில் பாதுகாப்பு இல்லை என்று கூறி, அவரை பெங்களூரு சிறையிலிருந்து சென்னைக்கு மாற்றும் திட்டமாக இது இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது போலத் தெரிகிறது. இரு மாநில பிரச்சினை போல மாற்றி சசிகலா உள்ளிட்டோரை தமிழக சிறைக்கு மாற்றும் திட்டத்தில் இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது என்று கூறுகிறார்கள்.
இதுபோல சிறை மாற்றம் சட்டப்படி சாத்தியம்தான். விஐபி கைதிகள், சொந்த ஊர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதை பரிசீலிக்க சிறை நிர்வாகத்தால் முடியும். அந்த அடிப்படையில்தான் இப்படி ஒரு செட்டப் தாக்குதல் நடந்ததோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.