ஆர்எஸ்எஸ்ஸில் பெண்கள் அரை டவுசர் அணியாதது ஏன்?... கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கிய ராகுல்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பெண்களை பார்த்ததில்லை என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தது சர்ச்சையாகி உள்ளது.
காந்திநகர்: ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பெண்கள் ஏன் அரைக்கால் டவுசர் அணிவதில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அகோட்டாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசுகையில், பாஜகவும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் பெண்களை பாகுபடுத்திப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நடத்தும் "சாகா" கூட்டங்களில் பெண்களை நீங்கள் பார்த்ததுண்டா? என்று கேள்வி எழுப்பிய ராகுல், எப்போதாவது அப்படிப் பார்க்க நேர்ந்தாலும், அவர்கள் ஆர்எஸ்எஸ்ஸின் அடையாள உடையான அரைக்கால் டவுசரை அணிந்து பார்த்ததுண்டா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் குறித்தும், பெண்கள் குறித்தும் ராகுல் காந்தி எழுப்பி உள்ள இந்தக் கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெண்கள் அமைதி
மேலும் ஆர்எஸ்எஸ்தான் பாஜகவின் தாய் இயக்கம். இவர்கள் நல்லது செய்வதால் பெண்கள் அமைதியாக இருப்பதாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நினைக்கின்றனர். ஒருவேளை எந்த பெண்ணாவது பேச முயற்சித்தால், அவரது வாயை மூடிவிடுவர்.
என்ன தவறு?
பாஜகவில் எத்தனையோ பெண்களை பார்த்துள்ளோம். ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு பெண்ணையும் பார்த்ததில்லை. அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?
சீன போன்
மாணவர்கள் போனில் செல்ஃபி எடுக்கும் போது மகிழ்ச்சி அடைவர். ஆனால் அந்த போன்கள் சீனாவில் உள்ள இளைஞர்களுக்குத்தான் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மோடி அரசு கவனம் செலுத்தாதனால் இவையெல்லாம் நிகழ்கிறது.
குஜராத்தில் தயாரானது
ஆனால் சீன பெண்களும், ஆண்களும் பயன்படுத்தும் போன் இந்தியாவில் தயாரித்தாகவும், குஜராத்தில் தயாரித்ததாகவும், வதோதராவில் தயாரித்ததாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றார் ராகுல்.