தமிழக தேர்தல் பொறுப்பாளராக 'ஜல்லிக்கட்டு புகழ்' பிரகாஷ் ஜவடேக்கர்.. பின்னணியில் மாஸ்டர் பிளான்
டெல்லி: தமிழக பாஜக பொறுப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் மற்றும் மின்சாரம், நிலக்கரி துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்தியே தீருவோம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார். இரண்டுக்கும் ஒரு முடிச்சு உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பியூஷ் கோயால் ஆகியோரை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நியமனம் செய்துள்ளார்.
சர்வதேச அரசியல்
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உரிமை சார்ந்த பிரச்சினையாக பார்க்கப்படும்போக்கு தற்போது அதிகரித்துள்ளது. சில வருடங்கள் முன்பு, ஜல்லிக்கட்டை ஜீவகாருண்யத்தோடு தொடர்புபடுத்தி பேசியவர்கள் கூட தற்போது அதன்பின்னுள்ள சர்வதேச அரசியலை பார்க்க தொடங்கிவிட்டனர்.
பீட்டா மீது சந்தேகம்
ஆயுதம் ஏந்தாமல் காளைகளை கட்டி அணைக்கும் ஒரு விளையாட்டை தடை செய்ய போராடுவோர், கசாப்பு கடைகளை கண்டும் காணாமல் இருப்பது ஜீவகாருண்ய சீலர்களுக்கே சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
அனைத்து கட்சிகள் ஆதரவு
இந்நிலையில்தான், மக்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு, தமிழகத்தின் அனைத்து பிரதான கட்சிகளும், ஜல்லிக்கட்டு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இதை புரிந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லிக்கும், சென்னைக்குமாக விமானத்தில் பறந்து, பறந்து ஜல்லிக்கட்டு நடத்த முன் முயற்சி எடுத்தார்.
ஜெய்ராம் ரமேஷ் செய்த வினை
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, 2011ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் பதவி வகித்தபோது, சிங்கம், புலிகளோடு காளைகளையும் காட்சிப்படுத்துதல் விலங்குகள் பட்டியலில் சேர்த்துவிட்டதுதான், இவ்வழக்கில் பெரும் தடையாக இருந்து வருகிறது.
ஜவடேக்கரின் அறிவிக்கை
இதையடுத்து, கடந்த 7ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், ஒரு அறிவிக்கையை வெளியிட்டார். அதில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம்
இந்த அறிவிக்கையை எதிர்த்து, மத்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட பல விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றம் சென்றன. உச்சநீதிமன்றமோ, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிக்கும் என உத்தரவிட்டது.
பாஜக மீது காட்டம்
இதனால், பிரகாஷ் ஜவடேக்கர், பொன்.ராதா மட்டுமின்றி, மோடி மீதும் தமிழகத்து எதிர்க்கட்சிகள் புழுதிவாரி இறைத்து வருகின்றன. 2014ல் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த பிறகும், சட்டத்தில் திருத்தம் கொண்டுவராதது இந்த தடை ஆணைக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
தேர்தல் பொறுப்பாளர்
இந்நிலையில், பிரகாஷ் ஜவடேக்கர் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜவடேக்கர் மீது தமிழகத்தில் குறிப்பிட்ட மக்கள் கோபத்தில் இருக்கும்போது, ஏன் அவரை பொறுப்பாளராக நியமித்துள்ளனர் என்ற ஐயம் அரசியல் பார்வையார்களுக்கு எழுந்தது.
ஹீரோவாக ஜவடேக்கர்
இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஜல்லிக்கட்டுடன் தொடர்புள்ள விலங்குகள் துன்புறுத்துதல் தடை சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த சட்டம் திருத்தப்பட்டால், ஜல்லிக்கட்டு நடத்த தடை இருக்காது. அப்போது, சட்ட திருத்தம் கொண்டுவந்த, ஜவடேக்கர் ஹீரோவாக காட்சியளிப்பார். இதை உணர்ந்துதான், தமிழக பாஜக பொறுப்பாளராக ஜவடேக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
பொன்.ராதா உறுதி
ஜவடேக்கர் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக இந்த சட்டத்திருத்தம் உதவும் என பாஜக நம்புகிறது. இக்கருத்தை பிரதிபலிக்கும்வகையில், ஜல்லிக்கட்டு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, இந்த ஆண்டே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.