பீகாரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: முதல்வர் நிதிஷ் வாக்குறுதி
பாட்னா: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் பீகாரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உறுதி அளித்துள்ளார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள இருக்கிறது.
அதேநேரத்தில் பீகாரில் ஆட்சியை எப்படியும் கைப்பற்றிவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. தற்போது மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக ஒரு வாக்குறுதி அளித்துள்ளார்.
அதாவது பீகார் பொதுத் தேர்தலில் நான் மீண்டும் முதல்வரானால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்பதுதான் நிதிஷ் குமார் அளித்துள்ள வாக்குறுதி.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியும் இதே கோஷத்தை தற்போது கையிலெடுத்துள்ளது. இதனால் பீகார் தேர்தல் களத்தில் பூரண மதுவிலக்கு முக்கிய விவாதப் பொருளாகி உள்ளது.