இரட்டை இலை யாருக்கு? நவ. 10க்குள் தேர்தல் ஆணையம் தீர்ப்பு அளிக்க முடியுமா?
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று நவம்பர் 10ஆம்தேதிக்குள் முடிவெடுக்க முடியாது என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் கேட்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி: இரட்டை இலை வழக்கு குறித்து விசாரித்து தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் அவகாசம் கேட்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை 6 முறை நடைபெற்றுள்ளது. தினகரன் தரப்பும், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒருங்கிணைந்த அணிகள் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருவருமே கார சார விவாதங்களை முன்வைத்துள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதியன்று இரட்டை இலை வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த கெடு முடிய இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் அதற்கு முன்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பளிக்க இயலாத காரியம். எனவே உச்சநீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
எந்த அணிக்கு சாதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் மற்றொரு அணி நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த சூழ்நிலையில் இரட்டை இலைக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலையை மீட்டெடுப்பார்களா? இலை துளிர்க்குமா? முடங்குமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.