பாஜக ஆட்சியில் தலையிடவே மாட்டோம்.. ஆர்.எஸ்.எஸ்.
ஜெய்ப்பூர்: பாஜக தலைமையிலான ஆட்சியில் ஒருபோதும் தலையிட மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியுள்ளது. மேலும், ரிமோட் கன்ட்ரோல் போல ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் செயல்படாது, அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் தவறானவை என்றும் இது விளக்கியுள்ளது.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், பாஜகவுக்கு ஒருபோதும் செயல்பாட்டு வழிமுறைகளை ஆர்.எஸ். எஸ். கூறாது. பாஜகவுக்கும் சரி, மோடிக்கும் சரி எப்படிச் செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூற மாட்டோம். இனி ஆட்சியை நடத்தப் போவது பாஜகதான். ரிமோட் கன்ட்ரோலாக ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். செயல்படாது. அரசிலும் சரி, பாஜக விவகாரத்திலும் சரி ஆர்.எஸ்.எஸ். தலையிடாது.
பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டது. அடுத்து ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுவது சகஜம்தான். குறிப்பாக காங்கிரஸாருக்கு இந்த எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருக்கும். இதேபோலத்தான் வாஜ்பாய்க்கும் நடந்தது. அதற்கு அவர், நானே ஒரு நேரடியான ரிமோட் கன்ட்ரோல்தான். எனக்கு தனியாக ஒரு ரிமோட் கன்ட்ரோல் தேவையில்லை என்று அப்போது அவர் பதிலளித்திருந்தார்.
நாங்கள் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. நல்ல தொரு மாற்றத்திற்காகத்தான் நாங்கள் பாடுபட்டோம். இப்போது மாற்றம் நடந்து விட்டது. அத்தோடு எங்களது வேலை முடிந்து விட்டது.
வாக்களிப்பதன் அவசியத்தையும், தங்களது உரிமையை மக்கள் பயன்படுத்துவது குறித்தும், மோடியை ஆதரிப்பதன் அவசியத்தையும் நாங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எங்களது வேலை அத்தோடு முடிந்தது. இனி நாட்டுக்கு சேவையாற்றும் பணியைத் தொடருவோம் என்றார் அவர்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு வேலை இல்லை - நாயுடு
இதற்கிடையே, பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், பாஜ ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எந்தப் பங்கும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். ஆட்சி நிர்வாகத்தில் செயல்பாட்டில் தலையிடாது. அப்படிப்பட்ட எண்ணும் அதனிடம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய நலனைக் கருத்தல் கொண்டும், தேசிய பிரச்சினைகள் குறித்தும் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். பேசும், செயல்படும். அது சமூக அமைப்பு என்பதால் அதன் கடமையைச் செய்கிறது. மற்றபடி அரசின் நிர்வாகத்தில் அது தலையிடாது.அதற்கான அவசியமும் இல்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில் பாஜக தலைவர்கள், குறிப்பாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைச் சந்தித்துப் பேசுவது வழக்கமான ஒன்றுதான். அதில் எந்த விசேஷமும் இல்லை என்றார்.