தாய்லாந்து மன்னர் பூமிபால், மாஜி சிவகாசி எம்.பி. ஜெயலட்சுமிக்கு இரங்கல்- லோக்சபா ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு லோக்சபா, ராஜ்யசபாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கியது. முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தாய்லாந்து மன்னர் பூமிபால், இஸ்ரோல் முன்னாள் அதிபர் ஷிமோன் மறைவுக்கும் ராஜ்யசபாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்த சிவகாசி தொகுதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஜெயலட்சுமிக்கு லோக்சபாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாசித்த இரங்கல் குறிப்பில், சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 83. 1971முதல் 1980 வரை சிவகாசி லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பியாக தொடர்ந்து இரண்டு முறை பணியாற்றி உள்ளதாக .குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் இந்திராவிடம் நெருக்கமாக இருந்த இவர் கடந்த சில ஆண்டுகாலமாக அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். கணவர் வெங்கடசாமியுடன் திருப்பூரில் உள்ள தனது மகன் டாக்டர் வெங்கடேஷ் வீட்டில் இருந்த அவர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் குறிப்பு வாசித்தார். மறைந்த உறுப்பினர்கள் கண்ணன், ரேணுகா சின்ஹாஅரிப் பெய்க், ஹர்ஸ்வர்த்தன் ஆகிய உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இரங்கல் தீர்மானத்திற்குப் பின்னர் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபா நாளை காலை 11 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்து சபையை ஒத்திவைத்தார்.