உ.பி.சட்டசபை தேர்தலில் இமாலய வெற்றி.. ராஜ்யசபாவில் ராஜ நடை போடப் போகிறது பாஜக!
உத்தரப்பிரதேச சட்டசபையில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் ராஜ்யசபாவில் மெஜாரிட்டி குறைவாக உள்ள அக்கட்சியின் பலம் கிடுகிடுவென அதிகரிக்கவுள்ளது.
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபையில் அமோக வெற்றி பெற்றுள்ளதன் எதிரொலியாக ராஜ்யசபாவில் பாஜகவுக்கு கூடுதல் எம்.பிக்கள் கிடைக்க வாய்ப்பு கூடியுள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது இன்று நடைபெற்று. இதில் 2 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி வெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை தனித்து போட்டியிட்ட பாஜக பெற்றுள்ளது. இதன் மூலம் ராஜ்யசபாவில் அக்கட்சிக்கு லாபம் கிடைக்கும்.
கிங் மேக்கர்
நாட்டிலேயே கிங் மேக்கர் மாநிலம் என்றால் அது உத்தரப்பிரதேசமாகும். அதிக சட்டசபை தொகுதிகளை பெற்றுள்ள அந்த மாநிலத்தில்தான் லோக்சபா, ராஜ்யசபா ஆகியவற்றுக்கும் அதிக உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போதைய பலம்
லோக்சபாவில் அறுதி பெரும்பான்மை பெற்ற பாஜகவுக்கு தற்போது ராஜ்யசபாவில் 53 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 59 உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது பாஜக ராஜ்யசபாவில் மைனாரிட்டிதான்.
உ.பி.யில் 31 எம்பிக்கள்
உத்தரப்பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 31 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது இவர்களில் சமாஜ்வாதிக்கு 18, பகுஜன் சமாஜுக்கு 6, சுயேச்சை உறுப்பினர் ஒருவர், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 3 உறுப்பினர்கள் உள்ளனர்.
அதிகரிக்கும் பலம்
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 324 சட்டசபை தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. எனவே பாஜகவுக்கு பெருமளவிலான உறுப்பினர்கள் இங்கிருந்து ராஜ்யசபாவுக்குப் போகவுள்ளனர்.
சமாஜ்வாதி- காங்கிரஸுக்கு 3 பேர்
கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் தலா வெறும் 3 உறுப்பினர்களை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்பமுடியும். மற்ற கட்சிகளின் ஆதரவின்றி பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு உறுப்பினரைகூட நியமிக்க முடியாது.
தைரியமாக செயல்பட முடியும்
ராஜ்யசபாவில் இதுவரை சற்று தொய்வடைந்து காணப்பட்ட பாஜக, உ.பி. வெற்றி காரணமாக சற்று தலைநிமிர்ந்து நடக்கக் கூடிய வாய்ப்பு பெருகியுள்ளது.