மே.வங்க தேர்தல் கருத்துக் கணிப்பு... முன்னிலையில் மம்தா; காங்- சிபிஎம் கூட்டணி அமைத்தால் சிக்கல்!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் தொடர்பான முதல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் முதல்வர் மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸுக்கு சாதகமாகவே முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு முட்டைதான் கிடைக்கும் என்றும் இக்கருத்துக் கணிப்பு முடிவு கூறியுள்ளது. மேற்கு வங்கத்தின் முன்னணி செய்திக் குழுமமான ஆனந்த பஜார் பத்ரிகாவின் அனந்தா டிவி மற்றும் ஏ.சி. நீல்சன் தனியார் அமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இதில் ஒரு சதவீத அளவில்தான் மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது என்பது
சுவாரஸ்யமானது. அதேசமயம், மமதா பானர்ஜிக்கு இந்த கருத்துக் கணிப்பு கவலையை ஏற்படுத்தாது என்றும் நம்பலாம்.
கூட்டணிக்கு முயற்சிக்கும் இடதுசாரிகள் - காங்கிரஸ்
இந்த தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் தீர்மானித்து அதுதொடர்பான பேச்சுக்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
2 சாய்ஸ்
இந்தக் கருத்துக் கணிப்பில் இடதுசாரிகள் - காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தால், திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 182 இடங்கள் கிடைக்கும். கூட்டணி அமையாவிட்டால் இது 197 ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங். - இடதுசாரிகளுக்கு
கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிக்கு 107 சீட் வரை கிடைக்கலாம். தனித்துப் போட்டியிட்டால் இடதுசாரிகளுக்கு 74 சீட்களும், காங்கிரஸுக்கு 16ம் கிடைக்கலாமாம்.
பாஜகவுக்கு முட்டை
இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பாஜகவுக்கும் தெரிந்த விஷயம்தான்.
வாக்கு சதவீதம்
எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியி்ட்டால் மமதா கட்சிக்கு 44 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். அதேசமயம் எதிர்க்கட்சிகளுக்கு 43 சதவீதம் வாக்குகள் கிடைக்குமாம். அதாவது வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டுமே.
இடதுசாரிகள் பலம் பெறுகிறார்கள்
எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கும் 43 சதவீதத்தில் 37 சதவீத வாக்குகள் இடதுசாரிகளுக்குக் கிடைக்கும் வாக்குகள் ஆகும். இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் மீண்டும் பலம் பெறுகிறார்கள் என்பதையும் இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
கூட்டணி அமையாதவரை மமதாவுக்கே லாபம்
இடதுசாரிகளும், காங்கிரஸும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நிச்சயம் மமதாவுக்கு லேசான பாதிப்பு வரும் என்பது கண்கூடு. என்னதான் அதிக சீட் மமதா கட்சிக்குக் கிடைத்தாலும் கூட தீவிரப் பிரசாரம் உள்ளிட்டவற்றால் அதைக் குறைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பீகார் போல
பீகாரில் லாலு பிரசாத் யாதவவும், நிதீஷ் குமாரும் இணைந்து அசத்தியது போல மேற்கு வங்கத்திலும் இடசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட சக்திகள் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
மமதா ஆட்சி மீது அதிருப்தி
மமதா பானர்ஜி ஆட்சி மீது மக்களிடையே நல்ல அதிருப்தியும் உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளை அவர் அடக்கி ஒடுக்குகிறார் சர்வாதிகாரமாக நடக்கிறார் என்ற புகைச்சல் உள்ளது. இந்த எதிர்ப்பு ஓட்டுக்களை எதிர்க்கட்சிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் மமதாவுக்கு டென்ஷனைக் கொடுக்க முடியும்.
கூட்டணியா? அட்ஜஸ்ட்மென்டா?
காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதில் இடதுசாரிகளுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. அது கேரளா. இந்த மாநிலத்திலும் மேற்கு வங்கத்தோடு சேர்ந்து சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. கேரளாவில் மோதலே காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் தான். இந் நிலையில் மேற்கு வங்கத்தில் இவர்கள் கூட்டணி அமைத்தால் கேரளாவில் இரு கட்சிகளும் நகைப்புக்குரிய, கேவலமான பெயரை சம்பாதிக்க வேண்டி வரும். இதனால் மேற்கு வங்கத்தில் நேரடியாக கூட்டணி அமைக்காமல் மறைமுகமாக சீட் அட்ஜஸ்ட்மென்ட் மாதிரியான வேலைகளில் இரு கட்சிகளும் ஈடுபடலாம் என்று தெரிகிறது.