பெங்களூர் பயங்கரம்: வங்கி பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் பறித்த கொள்ளையன்!
பெங்களூர்: பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் ஏடிஎம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய் (வயது 37) ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றார்.
(பெங்களூர் ஏடிஎம்மில் பெண் மீது நடந்த கொடூர தாக்குதல் வீடியோ
)

அரிவாள் வெட்டு
ஜோதி பணம் எடுக்கும்வரை காத்திருந்த மர்ம நபர், சட்டென்று உள்ளே புகுந்து, ஏ.டி.எம். ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய அந்த மர்ம நபர், துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். திடீரென்று ஜோதியை தலையில் அரிவாளால் வெட்டினார். இதில், ஜோதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

பணம் பறிப்பு
பின்னர் அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் ஷட்டரை திறந்து வெளியே வந்து, மீண்டும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து, அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். வாசலில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

உயிர் போராட்டம்
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது ஜோதி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் ஜோதியை மீட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிமான்ஸ் மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரூ 15 ஆயிரம்
மோப்ப நாய் வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம். மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் அத்துடன் நின்றுவிட்டது. ஜோதி அணிந்திருந்த நகைகள் கொள்ளை போகவில்லை. அவரது பையில் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போனை அந்த நபர் எடுத்துச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏ.டி.எம். மையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி இருந்தது. எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகிறார்கள்.

மண்டை ஓட்டில் காயம்
தாக்குதலுக்குள்ளான ஜோதியின் மண்டை ஓட்டில் காயம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவரது மூக்கும் முழுமையாக சேதமடைந்துள்ளது. அவரது உடலின் வலது பக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளது. தற்போது அவரது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்துள்ளனர். அவருக்கு சுய நினைவும் உள்ளது.

கேமாரவைப் பார்த்தும் பயப்படாத குற்றவாளி
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர், ஏடிஎம் மையத்துக்குள் ரகசிய கேமரா இருப்பதை அறிந்தும் கூட சற்றும் பயப்படாமல் ஈடுபட்டுள்ளான்.

8 தனிப்படை அமைப்பு
இந்த கொடூர தாக்குதல் நபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூர் நகரமே இந்த சம்பவத்தால் கொதிப்படைந்துள்ளதால் பெங்களூர் போலீஸார் தீவிரமாக அவனைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications