சபரிமலை கோயிலில் பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு சபரிமலைக்கு பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கபடுகிறது? என்றும், பெண்களுக்கு கோவிலுக்கு செல்ல அரசியல் சாசனத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதத்தின் பெயரால் அவர்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
எந்த அடிப்படையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்லவில்லை என்பதற்கு ஆதாரத்தை காட்டமுடியுமா எனவும் கேட்டனர்.
கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கோயில் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் மேலும், கோயில் நிர்வாகத்திற்கும், கேரள அரசிற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அதேவேளையில், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற மரபு கடந்த 1,500 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைய 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.