திரிம்பகேஷ்வரர் கோவில் கருவறைக்குள் நுழைந்து வழிபாடு - சுவராஜ்ய மகிளா சங்கம் அதிரடி
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் திரிம்பகேஷ்வரர் கோவில் கருவறையில் பலத்த எதிர்ப்புக்கிடையே நுழைந்து சுவராஜ்ய மகிளா சங்கத்தினர் வழிபாடு நடத்தினர்.
மகாராஷ்டிர மாநிலம் சனி சிக்னாபூரில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் பெண்கள் நுழைய 400 ஆண்டுகாலமாக தடை இருந்தது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை ஹைகோர்ட் கோவிலுக்குள் நுழைய ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சனீஸ்வரர் கோவிலில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க தரிசன கோவில்களில் ஒன்றாக திகழ்வது நாசிக் மாவட்டம் திரிம்பகேஷ்வரர் கோவில். மும்பை ஹஒகோர்ட் உத்தரவை தொடர்ந்து இந்த கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையும் நீங்கியது.
இந்நிலையில் சுவராஜ்ய மகிளா சங்கம் என்ற பெண்கள் அமைப்பினர் திரிம்பகேஷ்வர் கோவில் கருவறையில் நுழைய போவதாக அறிவித்தனர். இதற்கு கோவில் நிர்வாகம், உள்ளூர் அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 200க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
எனினும் நேற்று காலை பெண்கள் அமைப்பினர் திட்டமிட்டபடி போலீஸ் பாதுகாப்புடன் கோவில் கருவறைக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நாசிக்கில் உள்ளூர் அமைப்பினர் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.