குஜராத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்தி பென் பதவியேற்பு- நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பு
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் இன்று பதவி ஏற்றார். இதன் மூலம் குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்கு அவர் உரியவராகிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் மத்தியில் ஆட்சி அமைக்கிறது பாஜக. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடி, வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.
இதனால் நேற்று தனது குஜராத் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் மோடி. இதன் மூலம் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால முதல்வர் பணி முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக குஜராத் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் காந்திநகரில் நடைபெற்றது.
அதில் நரேந்திர மோடி, குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், மோடியின் நண்பருமான அமித் ஷா, பா.ஜ.க. பொதுச் செயலாளர் தாவர் சந்த் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் பதவிக்கு ஆனந்தி பென் படேல் பெயரை மாநில விவசாயத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா முன்மொழிய, அதனை அமித் ஷா உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனையடுத்து, 73 வயதான ஆனந்தி பென் படேல், குஜராத்தின் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, இன்று ஆனந்திபென் படேல் குஜராத்தின் முதல்வராக பதவியேற்றார். காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் கமலா பெனிவால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நரேந்திர மோடி, கேசுபாய் படேல் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரும் கலந்துகொண்டனர். இதன்மூலம், குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்னும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவராக, வலதுகரம் போல் செயல்பட்டு வந்தவர் ஆனந்திபென் படேல். மோடிக்கு பிறகு குஜராத் முதல்வர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அப்பதவிக்கு ஆனந்தி பென் தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் சார்ந்த சமூகத்தினர் குஜராத்தில் அதிகளவில் வசிப்பதும் காரணம் எனக் கூறப்படுகிறது.