தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் பெரும் போராட்டம்.. காவிரி அமைப்பு தலைவர் எச்சரிக்கை
மண்டியா: உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என்று காவிரி ஹித ரக்ஷனா வேதிகே (காவிரி நல அமைப்பு) தலைவர் மாதேகவுடா, கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கடந்த 23ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு தலா 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. இதுகுறித்து மாதேகவுடா, மண்டியாவில் நிருபர்களிடம் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது. ஆட்சியை இழந்தாலும் தமிழகத்துக்கு சித்தராமையா அரசு, தண்ணீர் திறக்க கூடாது. இதையும் மீறி தண்ணீர் திறந்துவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
சிறப்பு சட்டசபை கூட்டம் எடுத்த முடிவுக்கு முதல்வர் கட்டுப்பட வேண்டும். மாநில மக்கள் சித்தராமையா அரசுக்கு பக்க பலமாக இருப்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications