நான் மட்டும் நிதியமைச்சராக இருந்திருந்தால் இந்நேரம் ராஜினாமா செய்திருப்பேன்.. ப.சிதம்பரம் பாய்ச்சல்
பழைய 500,1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்னையில் பிரதமர் பிடிவாதம் பிடித்திருந்தால் நிதியமைச்சராக தானாக இருப்பின் ராஜினாமா செய்திருப்பேன் என்று ப.சிதம்பரம் சொல்லியுள்ளார்.
டெல்லி: அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டாம் என்றும், அதனை மீறி பிரதமர் அறிவித்திருந்தால் தற்போது நிதியமைச்சராக தான் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் என்றும் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
டெல்லியில் நடந்த இலக்கியத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது:
முந்தைய காலத்தில் ஆட்சியில் இருந்ததால் மட்டுமே காங்கிரஸ் கட்சி மீது ஊழல் புகார் கூறுவது ஏற்புடையது அல்ல என்றார். அனைத்து ஆட்சிக் காலத்திலும் ஊழல் நடக்கிறது அதனைதான் மறுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆள்கிறா அல்லது வேறு கட்சி ஆட்சி நடத்துகிறதா என்பது பிரச்னையல்ல. ஊழலை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் என்பதால் தண்டிக்கப்படக் கூடாது என்று ஒருபோதும் சொல்லவும் இல்லை.
தற்போதைய நிலையில் அதிக ரூபாய் நோட்டு ஓழிக்கப்படக் கூடாது என்று தான் நிதியமைச்சராக இருந்திருந்தால் பிரதமரிடம் வலியுறுத்தி இருப்பேன். பிரதமர் அதனையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பேன் என்றார் ப.சிதம்பரம்
தொழில்நுட்ப பணப்பரிமாற்றம் நகர்புரத்தில் மேற்கொள்ளப்படுவதால் குறுகிய கால பயன் மட்டுமே கிடைக்கும் என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த நடவடிக்கையினால் ஊழல் ஒரு போதும் ஒழிந்துவிடாது என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளிடம் விவாதிக்கவிட்டால் கூட பரவாயில்லை முந்தைய நிதியமைச்சர் யஷ்வந்தி சின்காவிடமாவது மத்திய அரசு கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.