முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறு தான்... காலம் கடந்து சிந்திக்கும் கெஜ்ரிவால்
டெல்லி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தான் செய்த தவறு எனத் தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால்.
கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
தற்போது லோக்சபா தேர்தலை முன்னிறுத்தி அதற்கான பணிகளில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் கெஜ்ரிவால்.
இந்நிலையில் பதவியில் அமர்ந்த ஒன்றரை மாதங்களில் ஆட்சியைக் கலைத்தது உட்பட அக்கட்சியின் நடவடிக்கைகளால், ஆம் ஆத்மி மீது மக்களுக்கு சிறிதள்வு நம்பிக்கையின்மையும் ஏற்பட்டுள்ளது மறுக்க இயலாதது. இதனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன சமீபத்திய நிகழ்வுகள்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலை கடந்த சில மாதங்களாக பொது இடத்தில் வைத்து பலர் நேரடியாக தாக்கி வருகின்றனர். கொடுத்த வாக்கை நிறைவேற்றாததே காரணம் என தாக்கியவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தான் டெல்லி முதல்வர் பதவியை அவசரப்பட்டு ராஜினாமா செய்தது தவறு தான் என செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
மேலும், இது போன்ற அவசர முடிவுகளை கட்சி இனி எதிர்காலத்தில் எடுக்காது என உறுதி பட தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமல்ல எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வாரணாசி மற்றும் அமேதி தொகுதிகளில் வெற்றி பெற்று நாட்டின் தலையெழுத்தை மாற்றுவோம் என அவர் கூறியுள்ளார்.