யோகி ஆதித்யநாத்தான் இந்திய பிரதமர்.. தந்தை பேட்டியால் பாஜகவிற்குள் பரபரப்பு
டெல்லி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் பிரதமராக பதவியேற்பார் என அவரின் தந்தை ஆனந்த் பிஷ்ட் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பிஷ்ட் கூறுகையில், 2024 ஆம் ஆண்டில் தனது மகன் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் பிரதமராக இருப்பார் என்று கூறினார்.மேலும் உத்தரப் பிரதேசம் யோகிக்கு 'உத்தமப்பிரதேசமாக' மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆதித்யநாத், சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுக்களால் பாஜக வட்டாரத்தில் புகழ்பெற்றவர். முதல்வரான பிறகு அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் பெரும் பாராட்டுகளுடன் வட இந்திய ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வருகின்றன.
திடீர் முதல்வர்
நாடாளுமன்ற எம்.பியாக இருந்த யோகி ஆதித்யநாத், உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக வென்றதும் முதல்வராக்கப்பட்டார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார்.
ஊடகங்களில் ஆதித்யநாத்
ஆதித்யநாத் அரசு நடத்தும் விதம், மோடி அரசை போலவே ஊடகங்களால் அதிக கவனம் கொடுத்து செய்திகளாக வெளியிடப்பட்டன. எனவே மோடிக்கு எதிராக பாஜகவில் ஒருவர் உருவாகுகிறாரா என்ற கேள்வி பாஜகவினர் மத்தியிலேயே உருவானது.
அரவணைப்பாரா
இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் தந்தை வெளிப்படையாகவே ஆதித்யநாத் பிரதமர் பதவிக்கான நபர் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் மோடி ஆதித்யநாத்தை அரவணைப்பாரா, அல்லது எதிர்த்து காய் நகர்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
இருப்பினும் 2019 நாடாளுமன்ற தேர்தல் வரை உ.பி.யில் ஆதித்யநாத் முதல்வராக தொடருவதே பாஜகவுக்கு நல்லது என்ற கருத்து அக்கட்சி மேல்மட்ட தலைவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.