எத்தனை நோட்டீஸ் வேணாலும் அனுப்பிக்கோங்க...தேர்தல் கமிஷனிடம் சவடால் விடும் மம்தா
கோல்கட்டா : மேற்குவங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மார்ச் 27 ம் தேதி இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 4 ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி , தேர்தல் விதிகளை மீறியதாக அளித்த புகார்களை தேர்தல் கமிஷன் கண்டு கொள்வதில்லை என தேர்தல் கமிஷன் மீதும், பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டி வருகிறார்.
ஆனால் ஏப்ரல் 3 ம் தேதி ஹூக்ளியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முஸ்லிம்கள் மற்ற முக்கிய சிறுபான்மையினரின் ஒட்டுக்களை பிரிக்கக் கூடாது என பேசி உள்ளார். இதனால் மம்தா பானர்ஜி மதவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்ததாக, தேர்தல் கமிஷன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மம்தா தான் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எத்தனை நோட்டீஸ் வேணா அனுப்புங்க
இந்நிலையில் இந்த தகவலை சுட்டிக்காட்டி பேசிய மம்தா, நீங்கள் எனக்கு 10 நோட்டீஸ் அனுப்பினாலும் என்னுடைய பதில் ஒரே மாதிரி தான் இருக்கும். இந்து, முஸ்லிம் ஓட்டு பிரிவினைக்கு எதிராக தான் எப்போதும் பேசுவேன். மத அடிப்படையிலான ஓட்டு பிரிவினைக்கு எதிராக தான் எப்போதும் நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
மோடி மீது ஏன் புகாரில்லை
தனது நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சுவேந்து அதிகாரி, தனக்கு எதிராக மாறியதை குறிப்பிட்டு பேசிய மம்தா, இந்து, முஸ்லிம் ஓட்டு வங்கி பற்றியே ஒவ்வொரு நாளும் பேசும் நரேந்திர மோடிக்கு எதிராக ஏன் எந்த புகாரும் இல்லை. நந்திகிராம் பிரச்சாரத்தின் போது மினி பாகிஸ்தான் என அவர் பேசியதற்கு எதிராக எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
அப்படி என்ன பேசினார் மம்தா
ஹூக்ளி பிரச்சார கூட்டத்தில் மம்தா பேசுகையில், ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என எனது சிறுபாதன்மையின சகோதர, சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன். பாஜக.,விடம் பணம் பெற்றுக் கொண்ட தீசக்திகளின் பேச்சுக்களைக் கேட்டு சிறுபான்மையின ஓட்டுக்களை பிரித்து விடாதீர்கள். அவர்கள் பல மத வாத வார்த்தைகளை கூறி, மத கலவரத்தை தூண்டி விடுவார்கள். சிறுபான்மையின ஓட்டுக்களை பிரிக்க பாஜக பணத்துடன் அலைகிறது என பேசினார்.
மம்தாவை விரும்பாத முஸ்லிம்கள்
மேற்குவங்கத்தில் உள்ள 27 சதவீதம் முஸ்லீம்கள், மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் இந்திய மதசார்பற்ற கூட்டணியும் சிறுபான்மையின ஓட்டுக்களை பிரிக்க முடியும். இது பாஜக.,விற்கு தான் சாதகமாக அமையும். அதனாலேயே ஓவைசியை பாஜக.,வின் பி டீம் என மம்தா கூறி வருகிறார்.
ரகசியத்தை அம்பலப்படுத்திய மோடி
கடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிய மோடியும் இதைக் குறிப்பிட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி கையை விட்டு போய் விட்டதால் தான் முஸ்லீம்கள் ஓட்டுக்கள் பிரிய அனுமதிக்கக் கூடாது என கூறி வருகிறார் மம்தா. முஸ்லீம்கள் உங்களுக்கு எதிராக மாறி விட்டனர் என்றார்.